தமிழுக்காக, தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துங்கள்

27 10 2008

தமிழுக்கு திறன் இல்லை என்ற சொல்லும், தமிழீழக் கொடூரங்களை கேட்க நாதியில்லை என்ற உண்மையும் சென்ற வாரங்களில் என்னை வெகுவாக பாதித்த விடயங்கள்

இந்த இரண்டு அநீதிகளுக்காகவும் ஆயுதம் ஏந்தி போராட தமிழர்களை தயார் செய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.

முதலில் தமிழுக்கு இழைக்கப்படும் கொடுமையை பார்ப்போம்.

என் மகனுக்கு 2 வயது கடந்துவிட்டது. தமிழ் எழுத படிக்க கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். உயிர் எழுத்துக்கள் 12. மெய் எழுத்துக்கள் 18. உயிர்மெய் எழுத்துக்கள் 216. ஆயுத எழுத்து 1., மொத்த எழுத்துக்கள் 247. இப்படி கற்றுக்கொடுக்கும் போது எதற்காக அம்மா இந்த ஆயுத எழுத்து என்றான் அறிவு. அப்போதைக்கு பதில் சொல்ல தெரியாத நான் தமிழை காப்பதற்காக என எதார்த்தமாக பதில் சொன்னேன். இனி கூடுதலாக ஸ,ஷ,ஜ,ஹ இந்த எழுத்துக்களை என்ன சொல்லி கற்றுக்கொடுப்பது?

தமிழில் சில எழுத்தக்கள் இல்லை அதனால் வடமொழியில் இருந்து கடன்வாங்கியது. இப்படி தான் தமிழ் சமுதாயம் எனக்கு கற்றுக்கொடுத்தது. இன்று தமிழகத்தில் பள்ளி பாடபுத்தகங்களில் இந்த நான்கு எழுத்துக்களை கற்றுக்கொடுப்பது இல்லை. சமுதாயத்திற்காக குழந்தைகள் மீதுள்ள பரிதாபத்தில் ஆசிரியர்கள் தான் சுயமாக கற்றுக்கொடுக்கிறார்கள்.

தமிழக அரசு இந்த நான்கு எழுத்துக்களை நீக்கவும் இல்லை, சேர்க்கவும் இல்லை. இதனால் இன்றுவரை தமிழ் ஒரு கடன்மாறி மொழியாகவே உள்ளது. நமது குழந்தைகளுக்கு மட்டுமல்ல தமிழ் கற்க விரும்பும் வேற்று மொழியினரிடமும் தமிழுக்கு திறன் இல்லை என்று தான் இநத நான்கு எழுத்துக்களுக்கான விளக்கத்தை தருகிறோம்.

உண்மையில் இந்த நான்கு எழுத்துக்கள் சமசுகிருத விரும்பிகளால் தமிழில் திணிக்கப்பட்டது என்பது தான் வரலாற்று உண்மை. தமிழ் இலக்கணத்திலோ, தமிழின் முதன்மை நூல்களிலோ இந்த நான்கு எழுத்துக்கள் இல்லை.

கொடுமை என்னவென்றால் தமிழை குறைகூறி வடமொழி எழுத்துக்களை திணித்தவர்கள் எளிதில் வெற்றிபெற்று விட்டார்கள். ஆனால் தமிழில் வடமொழி எழுத்துக்களை சேர்க்ககூடாது, நீக்கவேண்டும் என 2 ஆயிரம் ஆண்டுகளாக போராடுபவர்கள் இன்றுவரை இந்த தமிழ் சமுதாயத்திடம் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்.

தமிழர்கள் இந்த நான்கு எழுத்துக்களை தவிர இன்னபிற எழுத்துக்களை ஒதுக்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த நான்கு எழுத்துக்களை ஏன் ஒதுக்க மறுக்கிறார்கள்

1. பலரின் பெயர்களில் வருவது
2. உலக இணைப்பு மொழியாக அரங்கேரி வரும் ஆங்கிலத்துடன் தொடர்பை வைக்க இந்த நான்கு உச்சரிப்புகள் மிகமிக அவசியமாக இருப்பது.
3. பழகிவிட்டது

நியாயமான காரணங்கள் தான்.

இங்கு தமிழர்கள் ஒன்றை சிந்தித்தாக வேண்டும். இந்த நான்கு உச்சரிப்புகள் தேவை என்றால் அதற்கு நம்மீது திணிக்கப்பட்ட வடமொழி எழுத்துக்கள் தான் வேண்டும் என்றில்லை. தமிழ் எழுத்துக்களே அந்த உச்சரிப்பை தரும். நாம் தான் பயன்படுத்த தாழ்வுமனபான்மை கொண்டுள்ளோம்.

இந்த நான்கு உச்சரிப்புகளுக்கு மட்டுமல்ல ஓராயிரம் உச்சரிப்புகளையும் ஒலிக்க தமிழில் எழுத்து இருக்கிறது. இந்த தனிச்சிறப்பு தான் தமிழை உலக செம்மொழிகளில் இருந்து தனித்து காட்டுகிறது.

தமிழை எந்த சூழலிலும் காக்க தான் அதற்கு ஆயுத எழுத்து வழங்கப்பட்டிருக்கிறது.

ஆயுத எழுத்து உயிர், மெய், உயர்மெய் எழுத்துக்களுக்கு பொதுவானதாக இருப்பதோடு தமிழை காக்கும் ஆயுதமாகவும் இருக்கும் என்பது எனது எண்ணம்.

இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.

ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள,  ஃச்-ஸ்

இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், ஃசு என்பது சாத்தியப்படுகிறது.

ஸ் என்ற எழுத்தை தவிர நாம் பிறதை பயன்படுத்துவதில்லை.

உதாரணத்துக்கு காங்கிரஸ் என எழுத்தும்போது தான் ஸ் பயன்படுத்துகிறோம். காங்கிரசார், காங்கிரசிடம், காங்கிரசுடன், என்று தான் பயன்படுத்துகிறோம்.

ஒரு ஒலிக்காக தனி ஒரு எழுத்துவரியையே ஏற்பதற்கு பதிலாக ஸ் – ஃசு என்று ஆயுதத்தை பயன்படுத்தலாமே.

ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.

உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa.) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.

அடுத்து ஷ

ஷ-ஃச, ஷா-ஃசா, ஷி-ஃசி, ஷீ-ஃசீ, ஷ§-ஃசு, ஷ¨ – ஃசூ, ஷெ-ஃசெ, ஷே-ஃசே, ஷை-ஃசை, ஷொ-ஃசொ, ஷோ-ஃசோ, ஷைள-ஃசௌ, ஷ்-ஃச்

எல்லா உச்சரிப்பும் எளிதாகவே வருகிறதல்லவா? மேலும் ஷ என்ற உச்சரிப்பு மொழிக்கு இடையிலும் இறுதியிலும் வரும்போது ட வாக தமிழில் பயன்படுத்தி வருகிறோம். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். எ.கா: இலட்சுமி, நட்டம், விடம்.

அடுத்து ஜ

இந்த உச்சரிப்புக்கு பதிலாக ச என்ற நேரடி உச்சரிப்பையே பயன்படுத்திவருகிறோம்.

இல்லை ஜ உச்சரிப்பு தான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பவர்கள் ஞ்+ச பயன்படுத்தலாமே

ஞ்சா, ஞ்சி, ஞ்சூ, ஞ்செ என பயன்படுத்தலாமே..

அடுத்து ஹ

ஃக, … இப்படி தாரளம் பயன்படுத்தலாமே.

இங்கு சிலர் வடமொழி எழுத்து வேண்டாம் ஆனால் அதன் உச்சரிப்பு மட்டும் வேண்டுமா என கேட்கலாம். இந்த உச்சரிப்புகள் எல்லாம் ஏற்கனவே தமிழில் உள்ளது. உதாரணமாக க என்ற வல்லின எழுத்து எல்லா இடங்களிலும் வலிந்தே ஒலிப்பதில்லை. அதனுடன் சேரும் இன எழுத்து, குற்றிய லுகரம் போன்ற இடங்களில் வலிந்தும் மெலிந்தும் திரிந்தும் ஒலிக்கும். அதுபோன்றே தமிழின் எல்லா எழுத்துக்களும் எந்த உச்சரிப்புக்கும் உட்படும்.

இந்த உச்சரிப்புகளுக்கு எல்லாம் இலக்கணம் படித்துவிட்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாக எழுத்து கூட்டி வாசிக்கும் போதே இவை ஒலித்துவிடும். ஒத்த உச்சரிப்புகளுக்கு தனித்தனி எழுத்துக்கள் இல்லாமல் எல்லாவற்றிற்கும் பொருந்தும் ஒரு எழுத்தை கொண்டிருப்பது தான் தமிழின் எளிமையும் சிறப்பும்.

வடமொழி எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் தமிழ் எழுத்துக்களிலேயே சாத்தியப்படும் போது எதற்காக இன்னும் தமிழை கடன்வாங்கி மொழியாகவே வைத்திருக்க வேண்டும்?

தமிழர்கள் சிந்திப்பார்களா?

பழக்கத்தில் இருப்பதை மாற்றுவது கடினம் என எண்ணும் தமிழர்களுக்கு ஒரு நினைவூட்டல். வடமொழி எழுத்துக்களை தமிழில் திணிக்கும்போது நம் முன்னோர் அதை பழக எவ்வளவு கடினப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று நாமோ அதை எளிதாக பயன்படுத்துகிறோம். அதே போல தான் நாம் இந்த எழுத்துக்களை நீக்க முயற்சிக்கும் போது சிறிறு காலம் கடினப்பட வேண்டி வரும். ஆனால் நமது குழந்தைகள் வடமொழி எழுத்து இல்லாமல் எளிமையாக தமிழை எழுதிவிடுவார்கள்.

கடன்வாங்கி மொழி என்ற இழுக்கும் தமிழைவிட்டு நீங்கும்.

*************************

தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துவோம்.

இங்கு நான் குறிப்பிடும் ஆயுதம் ஆயுத எழுத்து அல்ல. அதன் தத்துவம். ஆயுத எழுத்து வாள், அம்பு போன்று இல்லாமல் கேடயமாக இருப்பது எல்லோரும் அறிந்ததே.

தமிழர்களே உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்போம்? இது ஈழத்தமிழரின் ஓலக்குரல். தமிழர்களை சுட்டுபொசுக்கும் இலங்கை அரசுக்கு எதிராக உங்களை கத்தி கடப்பாரை, பீரங்கி துப்பாக்கி, ஏந்தி போராட அழைக்கவில்லை ஈழத்து அநாதைகள். கேடயம் ஏந்துங்கள் என்று தானே கெஞ்சுகிறார்கள். இந்தியா உட்பட நாடுகள் இலங்கைக்கு வழங்கும் ஆயுத உதவியை தடுத்து நிறுத்தத்தானே கேட்கிறார்கள்.

இந்த ஆயுதத்தை கூட ஏந்த தயார் இல்லை என்றால் தமிழனை போல சுயநலவாதி, மனிததன்மையற்ற மிருகம் உலகில் உண்டா? கார்கில் யுத்தத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலமும் வாரி வழங்காதபடி 50 கோடி ரூபாயை வாரிவழங்கி வள்ளலாக பெருமைகொண்ட தமிழகமே. இன்று உனது தொப்புள்கொடி உறவுக்காக மட்டும் ஏன் அரசில் நாடகமாடுகிறாய்?

தமிழக அரசு முயன்றால் உலக அரங்கில் தமிழனுக்காக ஒரு ஈழத்தை அமைத்து தரமுடியும். ஆனால் அரசு பித்தலாட்டவாதிகளின் கையில் அல்லவா மாறி மாறி கூப்பாடு போடுகிறது.

எனது நியாயமான கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

1. இலங்கையில் என்ன நடக்கிறது?
2. ஈழத்தை வைத்து தமிழகத்தில் ஏன் அரசியல் நாடகங்கள்?
3. இலங்கை போன்ற நிலை இந்தியாவில் இருந்தால் தனிநாடு கேட்டு தமிழன் மட்டும் தான் போராடுவானா?
4. ஈழத்துக்கு முடிவு தான் என்ன?

விரிவாகவே கேட்கிறேன்

இலங்கை இறையாண்மை குறித்து முதலைகண்ணீர் வடிக்கும் இந்தியாரை பார்த்து:

1. இலங்கை சட்ட திட்டங்கள் தமிழரை இரண்டாம்பட்ச குடிமக்களாக நடத்துவது உண்மையா இல்லையா?
2. தமிழரை அடிமைகளாகவே வைத்திருக்க தக்க சட்டம் இலங்கையில் உண்டா இல்லையா?
3. தமிழன் ஒருவன் இலங்கையின் உயர்பதவிக்கு வரமுடியுமா?
4. இலங்கையின் இறையாண்மை சரியானது என்றால் அந்த சட்ட திட்டங்களை இந்தியாவில் அமல்படுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா?

அடுத்து கல்நெஞ்சம் கொண்ட தமிழ்நாட்டினரை பார்த்து ஒரு கேள்வி:

1. தமிழை அரசியல் செய்து சீர்குலைத்த அதே மனபான்மையை, குற்றுயிரும் குலையுயிருமாய் உயிர் பிச்சை கேட்டு வரும் ஈழத்து மக்களிடமும் காட்ட வேண்டுமா?

2. அனைத்து கட்சி கூட்டம், ஆர்ப்பாட்டம், ராசினாமா நாடகம், மனிதசங்கிலி இதெல்லாமம் எதற்காக?

3. விடுதலை புலிகளுககு ஆதரவாக பேசினால் சிறை என்றால் உங்கள் உண்மையான மனநிலை தான் என்ன?

4. ஈழத்தமிழர்கள் ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு இலங்கை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அடிமைகளாக இருக்கவேண்டும் என்பதா? அல்லது விடுதலை புலிகளை தவிர்த்து அறவழியில் இலங்கைக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்பதா? என்ன தான் ஈழமக்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்? தமிழக அரசியல் மாமேதைகளே ஈழத்துக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து, தயவு செய்து அரசியல் நாடகம் ஆடாதீர்கள்.

5. இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான சட்டதிட்டங்களை கொண்டுள்ளது. இந்த இனவெறி சட்டத்தை மாற்ற இந்தியா உட்பட சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் உலகின் 10 கோடி தமிழர்களும் இலங்கைக்கு எதிராக போர் தொடுப்போம் என ஏன் தமிழக அரசால் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற முடியவில்லை?

6. தமிழகத்தை தவிர பிற மாநிலத்தவருக்கு விடுதலை புலிகள் என்றால் காசுமீர் தீவிரவாதிகள் போன்றோர் என்ற எண்ணம் தான் இன்றளவும் இருக்கிறது. இந்தியாவில் காசுமீரை சேர்ந்த ஒருவன் முதலமைச்சராகவும் முடியும், பிரதமராகவும் முடியும், சனாதிபதியாகவும் முடியும், ராணுவ தளபதியாகவும் முடியும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இலங்கையில் அப்படி இல்லை. தமிழனை அடிமையாகவே வைத்திருக்க சட்டம் வகுக்கப்பட்டுள்ளது என ஏன் இந்திய மக்களுக்கு தமிழனால் புரியவைக்கமுடியவில்லை?

7. 40 பராளுமன்ற உறுப்பினர்கள் ராசினாமா செய்வோம் என பித்தலாட்டம் செய்வதை விட 40 உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி ஈழத்தமிழரின் நிலையை விளக்கி நீதிகேட்க முடியாதா?

8. கார்கில்நிதி, சுனாமி நிதி திரட்டியது போல ஈழத்தமிழுருக்காக இந்திய முழுவதும் பகிரங்கமாக நிதி திரட்ட முடியாதா?

9. இதெற்கெல்லாம் ராசீவ் காந்தி கொலை தடையாக இருக்கிறது என்று வாதிடும் காங்கிரசு மேதாவிகளை பார்த்து ஒரு கேள்வி: இந்திராகாந்தியை தனிப்பட்ட ஒரு சீக்கியர் கொன்றதற்காக 1500 சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கேட்டேன். ஓரளவு திருப்தியடைந்தவர்கள் பரிகாரமாக கொலையாளியின் மனைவிக்கு பாராளுமன்ற பதவி கொடுத்தார்களாம். அதே போல ராசிவ் கொலைக்காக 2 லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் வரை வாயமூடி இருந்துவிட்டோம். இன்னும் 10 கோடி தமிழர்களையும் கொன்று குவித்தால் தான் உங்களுக்கு திருப்தி கிடைக்குமா? ராசீவ் கொலை நிச்சயமாக வன்மையாக கண்டிக்க தக்கது தான். அதற்காக ஈழத்தமிழர் படுகொலையையும் விடுதலைபுலிகளையும் பற்றி பேசவே கூடாது என்றால் இது எந்தவகையான சனநாயகம்?

10. தமிழர்களே தமிழின தலைவன் வேலுபிள்ளை பிரபாகரனா, கருணாநிதியா எனபது அல்ல நம்முன் இருக்கும் கேள்வி. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வீரதீர வரலாறு கொன்ட தமிழினம் அடிமைபட்டே கிடக்கவேண்டுமா? என்பது தான் நம்முன் இருக்கும் அவலம். தமிழினத் தலைவராக அகத்தியரும், தொல்காப்பியரும், திருவள்ளுவரும் உலகெங்கும் கம்பீரமாய் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அதை நிலைநாட்ட நமக்கு தேவை அரசியல் சூழ்ச்சிகள் இல்லாத ஒற்றுமை. அடிமை எண்ணங்கள் இல்லாத சுதந்திர மனபான்மை.

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும். உலகன் 10 கோடி தமிழர்களே தாய்மொழிக்காகவும் தாய் மண்ணுக்காகவும் தயங்காமல் ஏந்துங்கள் ஆயுதத்தை கேடயமாக. அறப்போரை பகிரங்கமாக அறிவியுங்கள் இலங்கைக்கு எதிராக.