நாசம் செய்யும் நான்கு எழுத்துக்கள்

20 10 2008

தமிழில இருந்து வடமொழி எழுத்துக்களை நீக்கவேண்டும் என்றால் தமிழர்களே அதை எதிர்க்கிறார்கள். இந்த நான்கு எழுத்துக்களால் தமிழுக்கு வரும் தீங்கை புரியச்செய்வதே இந்த பதிவு. மேலும் இந்த நான்கு எழுத்துக்களை நீக்கினாலே அறிவியல தமிழ் எளிமையாகிவிடும் என்பதையும் பார்க்கலாம்.

தமிழில் வடமொழி எழுத்துக்களை நீங்குவதால் அறிவியல் சொற்களை எழுத முடியாது என்றும், ஸ, ஷ, ஜ, ஹ இந்த நான்கு எழுத்துக்கள் தமிழோடு இருப்பதால் தமிழ் மேலும் வளமையடையும் என்றும் சில தமிழர்களே கூறுகின்றனர்.

இந்த நான்கு எழுத்துக்கள் இல்லை என்றால் தமிழில் அறிவியலை எழுதவே முடியாது என சொல்வது தமிழரின் இயலாமை தான் காட்டுகிறது. இந்த நான்கு எழுத்துக்கள் நச்சு கிருமிபோல ஒட்டிக்கொண்டு தமிழுக்கு செய்யும் தீங்கை புரிந்துகொண்டீர்கள் என்றால் இதற்காக வரிந்துகட்ட மாட்டீர்கள்.

பல நாள்நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரிய சன்னிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுரஒலி பேதங்களை தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும், பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ்யம் டீக்கா டூக்காடிபணி முதலிய உரைகோள் கருவிகளை பொருள்தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெற வேண்டியதற்கு பாஷ்யகாரர்கள் வியாக்கியான கர்த்தாக்கள் டீக்கா வல்லவர்கள், டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசிரியர்கள் கிட்டுவது அருமையினும் அருமையுமாய் இருக்கிற ஆரியபாஷை. என்று வள்ளார் சொல்வதை பாருங்கள்.

இன்னும் புரியாதவர்கள் 20, அல்லது 30 வருடங்களுக்கு முந்தைய தமிழ்செய்திதாழ்கள், வடமொழி கலந்து எழுதப்பட்ட புத்தகங்களில் தமிழின் கொடுமை பாருங்கள்.

வடமொழி எழுத்துகளுக்கு எதிராக போரடியதன் விளைவு தான் இன்று இந்த எளிமை தமிழ் கிடைத்திருக்கிறது. பல்லாயிரம் தமிழ் வார்த்தைகள் விடுதலையாகி வந்திருக்கிறது.

இந்த நான்கு எழுத்துக்கள் தமிழோடு தொங்கிக்கொண்டு இருப்பதால் என்னென்ன தொழுநோய் தமிழுக்கு வந்திருக்கிறது என பாருங்கள்

1. தமிழின் சீரான இலக்கணம் அழிகிறது
2. தமிழ் உச்சரிப்புகள் கெடுகிறது
3. பல தமிழ் வார்த்தைகள் அழிகிறது.
4. புதிய சொல்லாக்கங்களே இல்லாமல் போகிறது
5. தமிழை சமசுகிருதம் தான் தாங்கிப்படித்திருக்கிறது. அது இல்லாவிட்டால் அறிவியல் அறியாத பிறபோக்கு மொழியாகிவிடும் என்கிறார்கள் சில பித்தலாட்டவாதிகள்.
6. நான்கு எழுத்துக்கள் போதாது. நான்கை ஏற்றுக்கொண்டதை போல நாற்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.
7. வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்பட்ட திருக்குறள் உட்பட பல அரிய தமிழ் நூற்களும் மதிப்பற்று போகிறது.
8. இந்த நான்கு நான்கு எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்படும் தமிழ்சொற்களை உலக அரங்கில் மதிப்பற்ற பழமைவாத சொற்களாக்குகிறார்கள்
9. எதிர்காலத்தில் இந்த நான்கு எழுத்துக்கள் இல்லாமல் தமிழே இல்லை என்ற நிலையை உருவாக்குகிறார்கள்
10. கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் சொற்கள் பிறக்காமல் போகிறது. இதனால் தமிழ் மலட்டு மொழியாகிறது.

இன்று உலகின் ஒப்பற்ற உயரிய நூல் திருக்குறள் என பெருமைபடுகிறோம். அதில் எங்கே போனது இந்த நான்கு எழுத்துக்கள்?

இந்த நாசமாக போன( தமிழை நாசமாக்கியதால் இப்படி குறிப்பிடுகிறேன்) நான்கு எழுத்துக்களை தூக்கி எரிவதால் தமிழ்அன்னைக்கு என்னென்ன ஆற்றல்கள் வருகிறது?

1. சீரிய, உயரிய, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இலக்கணம் கொண்ட மொழியாகிறது.
2. தனித்து வாழும் செம்மொழியாகிறது
3. அறிவியல் தமிழ் எளிதாகிறது.
4. சீரிய உச்சரிப்புடைய உன்னதமொழியாகிறது
5. சமசுகிருதம் என்ற சாயல் இல்லாமல் தனித்து நிற்கிறது.
6. காலவளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் சொற்களும் வளர்கிறது.
7. கணிணி உட்பட தகவல் தொழில்நுட்பங்களில் தன்னிகரற்ற மொழியாகிறது.
8. குழந்தைகளிடம் கொஞ்சும் மழலை தமிழை கேட்க முடிகிறது.
9. இயல், இசை நாடகம் காக்கப்படுகிறது.
10. என்றும் இளைமை மிளிர்கிறது தமிழுக்கு

இன்று பெரும்பாலான அறிவியல் வர்ர்த்தைகள் எல்லாம் கிரேக்கம் லத்தீன் மொழிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் பழமையான ஒரு பொதுமொழியில் இருக்கட்டும் என்பது தான். இந்த மொழிகளுக்கெல்லாம் தமிழ் எந்த விதத்தில் சளைத்தாக உள்ளது? உதாரணத்திற்கு அவர்கள் ஆல்பா, பீட்டா, காமா, என்கிறார்கள். இதன் பொருள் முதலாவது இரண்டாவது, மூன்றாவது என்பது தான். இதை மொழிபெயர்க்க நாம் fa , ba,. ga போன்ற உச்சரிப்புகள் தமிழில் இல்லை என வாதிடுகிறோம். ஆல்பா பீட்டா காமா என்று எழுதினாலும் புரிகிறது. அதைவிட தமிழில் நேர்மின் கதிர், எதிர்மின்கதிர், மின்சுமையற்ற என எளிமையாக மொழிபெயர்க்கும் போது இன்னும் கருத்தூன்றி படிக்க முடிகிறது.

கடவுள் துகள் எனப்படும் என்ற சொல்லை எப்படி தமிழில் எழுதுவது கிக்சு போசன் என்று எழுதலாம் இன்னும் தமிழ்படுத்தும் போது அடிப்படை துகள் எனலாம். இங்கு தமிழோடு ஒன்றிய பல புதிய சொற்கள் தமிழுக்கு கிடைக்கிறதே.

உயர்திரு. செயபாரதன் ( தமிழ் அணுவியல் விஞ்ஞானி. கனடா) அவர்களுடனான ஆக்கபூர்வமான விவாத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

//ஆர்கானிக் இரசாயனக் கணிதச் சமன்பாடுகளைத் தனித்தமிழில் எப்படி எழுதுவது என்று காட்டுங்கள்.//

வேதியலில் குறிப்பிடப்படும் அனைத்து தனிமங்களுக்கும் இயற்பியலில் பயன்படும் அனைதது அடிப்படை அளவீடுகள் மற்றும் அவற்றின் துணை அளவீடுகளுக்கும் ஒரே பொது குறியீடு உலகெங்கும் பின்பற்றப்படுகிறது. இவை எழுத்துக்களுக்காக பயன்படுத்தப்படுபவை அல்ல குறியீடுகளுக்காக பயன்படுத்தப்படுபவை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவை வேதியல் சமன்பாட்டை தருவிப்பதற்காகவும், கணித சமன்பாடுகளை நிரூபிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மட்டுமே. சொல்லப்போனால் இவை எண்களை போல பயன்படுத்தப்படுபவை. இவைகள் கலப்பது மொழி கலப்பும் அல்ல. இவை கலப்பதை நான் குறைகூறவும் இல்லை.

இவற்றிற்காகவெல்லாம் நாம் இவ்வளவு தூரம் எழுதவில்லை. இவற்றையெல்லாம் தமிழ்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. எண்களையம் குறியீடுகளையும் பயண்டுத்துவது மொழிகலப்பு அல்ல.

ஆக்சிசன் என்பதற்கு O2, ஐட்ரசன் என்பதற்கு H, 2, +, = இதெல்லாம் H2O என்ற சமன்பாட்டில் வருகிறது. இதில் 2, +, = இதை போல O, H ம் குறியீடுகள் தான். இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். குறியீடுகளுக்கும் தாங்கள் கூறும் மொழி விடுதலைக்கும் என்ன சம்மந்தம்.

//மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் sh(ஸ), sha(ஷ), ja(ஜ), ha(ஹ), ga( ?), da( ?), ba( ?), dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்.//

தங்கள் கூறியதை போல நான்கு க, நானகு, ட, நான்கு ச என சேர்த்தால் தமிழின் நிலையை பிரகிலுப்தம் வலைபதிவர் குறிப்பிடும் அதித்தமிழ் தான் மிஞ்சும். இப்படி சேர்ப்பதால் மட்டும் எல்லா உச்சரிப்புகளையும் கொண்டுவந்துவிட முடியுமா?

தற்போது தமிழில் ன, ண, ந, ல, ழ, ள, ற, ர இந்த எழுத்துக்கம் ஒரே உச்சரிப்புக்கு ஒன்றுக்கு இரண்டாகவும் மூன்றாகவும் இருக்கிறது. இவற்றில் ஒரு எழுத்து வரவேண்டிய இடத்தில் இன்னொரு எழுத்தை எழுதினால் எவ்வளவு பொருள் வேறுபடும் என்பது தங்கள் அறிந்ததே.

இவற்றை எல்லாம் சேர்ப்பதால் எந்த க வை எங்கே போடுவது என்ற குழப்பமும் காலதாமதமும் தான் ஏற்படுமே தவிர தமிழ் எளிமை படாது. எது தமிழ் விடுதலை என்று நீங்களே சொல்லுங்கள்.


செயற்பாடுகள்

Information

18 responses

20 10 2008
Jayabarathan S

அன்புள்ள குழலி,

திருக்குறள் ஓர் உன்னத நெறி நூல். 2000 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானம் வளராத முன்னேறாத காலத்தில் தோன்றியது. அதில் உள்ள சொற்களை வைத்து நவீன விஞ்ஞான நூல் எழுத முடியாது. அதன் தனித்துவத்தைச் சான்றாகக் காட்டுவது விஞ்ஞானப் புதுத் தமிழுக்கு உகந்த வாதமில்லை.

//தமிழை சமசுகிருதம் தான் தாங்கிப்படித்திருக்கிறது. அது இல்லாவிட்டால் அறிவியல் அறியாத பிறபோக்கு மொழியாகிவிடும் என்கிறார்கள் சில பித்தலாட்டவாதிகள்.//

நாமெல்லாம் நாகரீகம் உள்ள கலாச்சாரத் தமிழர்கள். உலகில் எல்லாரும் படிக்கும் அகில வலையில் எழுதும் போதும், பழகும் போதும் நாகரீகமாக நடந்து கொள்வது நட்புக்கு வல்லது.

ஒவ்வோர் அடிக்கும் சமமான ஓர் எதிரடி உண்டாகும் (For every action there is an equivalent & opposite reaction) என்பது நியூட்டன் நியதி.

தர்க்கமிடும் போது தர்க்கத்தை விட்டு விட்டு தனிப்பட்டுத் தமிழரைத் தாக்குவது அநாகரீகம். அவ்விதம் வலையில் தாக்கும் போது தாக்குபவர்தான் தன் முகத்தில் கரியைப் பூசிக் கொள்கிறார்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

20 10 2008
Jayabarathan S

அன்புள்ள குழலி,

//தமிழை சமசுகிருதம் தான் தாங்கிப்படித்திருக்கிறது. அது இல்லாவிட்டால் அறிவியல் அறியாத பிறபோக்கு மொழியாகிவிடும் என்கிறார்கள் சில பித்தலாட்டவாதிகள்.//

உங்களுக்கு அவசியம் திருக்குறள் பயிற்சி தேவை.

யாகாவார் ஆயினும் நாகாக்க ! காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு !

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

21 10 2008
RV

எனக்கு ஒரு நெருங்கிய நண்பன் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே வழி ஜாகிங் என்று சொல்வான். காதல் தோல்வியா, ஜாகிங் போ. ப்ரமோஷன் கிடைக்க வில்லையா, ஜாகிங் போ. பணம் பற்றாக்குறையா, ஜாகிங் போ. அப்பா திட்டினாரா, ஜாகிங் போ. உங்களுக்கு ஜாகிங்குக்கு மாற்றாக தனித்தமிழ் போலிருக்கிறது.

நீங்கள் எழுதி இருப்பவை இவை:
1. தமிழின் சீரான இலக்கணம் அழிகிறது – எனக்கு இலக்கணம் தெரியாது, அதனால் வாயை மூடிக்கொள்கிறேன்.
2. தமிழ் உச்சரிப்புகள் கெடுகிறது – எப்படி? எல்லாரும் ஆஷ்டுகுஷ்டி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்களா? (வேட்டி-வேஷ்டி என்று ஆரம்பிக்காதீர்கள். எனக்கு தெரிந்து வேஷ்டி என்று குறைந்த பட்சம் நூறு ஆண்டுகளாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்)
3. பல தமிழ் வார்த்தைகள் அழிகிறது – எப்படி? அம்மா என்பதற்கு பதிலுக்கு எல்லாரும் மாதாஸ்ரீ என்று அழைக்கப்போகிறார்களா? எல்லாரும் மம்மி என்றல்லவா அழைக்கிறார்கள்? ஆங்கில மோகம் இதை விட பெரிய பிரச்சினையாக உங்களுக்கு தெரியவில்லையா?
4. புதிய சொல்லாக்கங்களே இல்லாமல் போகிறது – என்னங்க, கொஞ்சம் விட்டால் காலரா பரவுகிறது என்பீர்கள் போலிருக்கிறதே? இந்த நாலு எழுத்துக்களுக்கும், புதிய சொல்லாக்கங்களுக்கும் என்ன தொடர்பு?
5. தமிழை சமசுகிருதம் தான் தாங்கிப்படித்திருக்கிறது. அது இல்லாவிட்டால் அறிவியல் அறியாத பிறபோக்கு மொழியாகிவிடும் என்கிறார்கள் சில பித்தலாட்டவாதிகள். – இதுதான் உங்கள் உண்மையான கோபம் என்று நினைக்கிறேன். சரியான கோபம்தான். அவர்களோடு வாதம் புரியுங்கள். நாங்களும் வருகிறோம். ஆனால் யாரோ ஏதோ முட்டாள்தனமாக சொன்னால் அதற்காக இப்படியா? யாராவது கோதுமையிளிருந்துதான் அரிசி வந்தது என்று சொன்னால் சப்பாத்தி பூரி சாப்பிடுவதை நிறுத்திவிடுவோமா என்ன?
6. நான்கு எழுத்துக்கள் போதாது. நான்கை ஏற்றுக்கொண்டதை போல நாற்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.
நான் தமிழ் அறிஞன் அல்லன். ஒரே ஒரு practical, personal, problem. தமிழ் தாய் மொழியாக இல்லாதவர்களுக்கு க என்ற ஒரே எழுத்து இரு வகை ஒலிகளை குறிப்பிடுவது தமிழ் கற்றுக்கொள்வதை இன்னும் கஷ்டமாக்கும் என்று நினைக்கிறேன். நான் அமேரிக்காவில் வசிக்கிறேன். என் பெண்களுக்கு இன்னும் தமிழ் எழுதப் படிக்க தெரியாது. அவர்கள் நிச்சயமாக இதனால் குழம்புவார்கள்.

7. வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்பட்ட திருக்குறள் உட்பட பல அரிய தமிழ் நூற்களும் மதிப்பற்று போகிறது. – என்னங்க, இதெல்லாம் ரொம்ப ஓவர். குறளில் ஜ இருக்கிறதா ஷ இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் ஒரே ஆள் நீங்களாகத்தான் இருக்க வேண்டும்! 🙂

8. இந்த நான்கு நான்கு எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்படும் தமிழ்சொற்களை உலக அரங்கில் மதிப்பற்ற பழமைவாத சொற்களாக்குகிறார்கள் – யார்? ஒரு எடுத்துக்காட்டு சொல்லுங்களேன்!

9. எதிர்காலத்தில் இந்த நான்கு எழுத்துக்கள் இல்லாமல் தமிழே இல்லை என்ற நிலையை உருவாக்குகிறார்கள். – யார்? எங்கே? எப்படி?

10. கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் சொற்கள் பிறக்காமல் போகிறது. இதனால் தமிழ் மலட்டு மொழியாகிறது. 4ஆவது பாயிண்டில் சொன்னதை இங்கே திருப்பி சொல்லி இருக்கிறீர்கள்.

ஜஹான்கீர், ஷாஜஹான், அமெரிக்க அதிபர் புஷ் போன்ற பெயர்களை தமிழில் சகான்கீர், சாசகான், புச், என்று எழுதுவது எனக்கு விரும்பத்தக்கதாக தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் என் பெயரை அமெரிக்கர்கள் கொலை செய்யும்போது எனக்கு வரும் கடுப்பு அவர்களுக்கும் வரத்தானே செய்யும்? ஒவ்வொரு ஒலியையும் தமிழில் கொண்டு வர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இருக்கும் ஒலிகளை ஒழிப்பதில் என்ன லாபம் என்று புரியவே இல்லை.

உங்கள் லாஜிக்படி தமிழை உலகில் பரப்புவது ரொம்ப சுலபம். எல்லா மொழிகளிலும் ழ சத்தத்தை சேர்த்துவிட்டால் தமிழ் வளர்ந்துவிடும்!

வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளை சீர்திருத்தியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.பெரியார் லை, னை போன்ற எழுத்துகளை மாற்றினார். இதனால் தமிழ் என்ன குறைந்தா போய்விட்டது? இன்னும் வளர அல்லவா செய்திருக்கிறது? தமிழ் மீது ஏன் உங்களுக்கு இவ்வளவு அவநம்பிக்கை?

நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வாதமும் வீரமாமுனிவருக்கும் பெரியாருக்கும் கூட பொருந்தும்! என் தமிழை மாற்ற இந்த வெள்ளைக்காரனுக்கு என்ன திமிர், இந்த கன்னடக்காரனுக்கு என்ன உரிமை என்று உங்களைப் போலவே யாராவது வாதாடி இருக்கலாம்!

21 10 2008
Jayabarathan S

அன்புள்ள குழலி

கிரந்த எழுத்துக்களின்றித் தாறுமாறாக விஞ்ஞானப் பெயர்களைத் தமிழில் எழுதி விஞ்ஞானத் தெளிவைச் சிதைப்பது நல்லது என்றால் நான் வாதிட வரவில்லை.

உதாரணமாக ஸ்டிரான்சியம், ஸ்டாலின், ஸ்பெய்ன், ஸ்புட்னிக் போன்ற பெயர்களைத் தனித்தமிழில் எழுத முடியாது. இந்தப் பெயர்கள் வந்தால் தூய தமிழில் எழுத முடியாமல் விட்டு விடுவதா ? அல்லது தமிழ்க் காப்பாளியாக எண்ணிக் கொண்டு தனித்தமிழில் தாறுமாறாக எழுதிப் படிப்போரையும், கேட்போரையும் திண்டாட வைப்பதா ?

+++++++++++++

//இவற்றிற்காகவெல்லாம் நாம் இவ்வளவு தூரம் எழுதவில்லை. இவற்றையெல்லாம் தமிழ்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. எண்களையம் குறியீடுகளையும் பயண்டுத்துவது மொழிகலப்பு அல்ல.

ஆக்சிசன் என்பதற்கு O2 ஐட்ரசன் என்பதற்கு H 2, +, = இதெல்லாம் H20 என்ற சமன்பாட்டில் வருகிறது. இதில் 2, +, = இதை போல O, H குறியீடுகள் தான். இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

குறியீடுகளுக்கும் தாங்கள் கூறும் மொழி விடுதலைக்கும் என்ன சம்மந்தம்.//

++++++++++++++++++

குறியீட்டுக்கும் எழுத்து- எழுத்து ஒலி உச்சரிப்புக்கும் உடன்பாடுகள் உள்ளன. தலை மட்டும் தனித்தமிழாக இருந்தால் போதும். உடம்பு எப்படியும் இருக்கலாம் என்பது உங்கள் வாதமா ?

//இவற்றையெல்லாம் தமிழ்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை//

என்று சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எது தேவை எது தேவை இல்லை என்பதைத் தமிழ் அறிஞர்கள் தேர்வு செய்ய வேண்டியது.

முதலில் நீங்கள் விஞ்ஞானியா, வேறு பட்டதாரியா யார் என்று சொன்னால் நல்லது. விரும்பினால் உங்கள் பட்டப் படிப்பு, உத்தியோகம், அனுபவம் ஆகியவற்றைத் தயவு செய்து சொல்வீர்களா ?

++++++++++++++++

//தங்கள் பெயரை செயபாரதன் என நான் எழுதாமைககு காரணம் தங்களுக்கு விருப்பமில்லை என குறிப்பிட்டு இருந்ததால் மட்டுமே. மேலும் பெயர்கள் அவரவர் விருப்பம் போல அழைப்பதை தான் நானும் விரும்புகிறேன்.//

உங்கள் பெயரை ஆங்கில ஈமெயில் முகவரியில் படித்து விட்டு ஒருவர் “குலலி” “குளலி” என்று தமிழில் எழுதினால் என்ன செய்வீர்கள் ?

+++++++++++++

//மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்.//

//தங்கள் கூறியதை போல நான்கு க, நானகு, ட, நான்கு ச என சேர்த்தால் தமிழின் நிலையை பிரகிலுப்தம் வலைபதிவர் குறிப்பிடும் அதித்தமிழ் தான் மிஞ்சும். இப்படி சேர்ப்பதால் மட்டும் எல்லா உச்சரிப்புகளையும் கொண்டுவந்துவிட முடியுமா? எந்தமொழியாலும் எல்லா உச்சரிப்புகளையம் எழுத்தில் கொண்டுவரமுடியாது.//

மெல்லோசை எழுத்துக்கள் விஞ்ஞானத்துக்கும் மற்றுமல்ல, கர்நாடக சங்கீத இசைகளுக்கும் தேவைப்படுகின்றன. செவிக்கினிய தஞ்சாவூர் தியாகராஜர் கீர்த்தனைகளுக்கு எல்லா வகை மெல்லிசை எழுத்துக்களும் வேண்டும். இல்லா விட்டால் நமது இசைத்தமிழ் அவற்றின் சேர்க்கை யில்லாமல் பிற்போக்கு இசை ஆகிவிடும்.

ஒலிபெயர்ப்பு இசைத் தமிழுக்கும் அவசியம்.

தமிழ் யார் ஒருவருக்கும் சொந்தமில்லை. ஆதலால் தன்னைத் தமிழ்க் காப்பாளியாக கற்பனை செய்து கொண்டு வளரும் தமிழைத் தடுக்க முனையாதீர்கள். கிரந்த எழுத்துக்களை நடையில் கையாளுவதும், வெறுப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

21 10 2008
Jayabarathan S

அன்புள்ள குழலி,

//எந்த சொல்லையும் தமிழ் உச்சரிப்புக்குள் கொண்டுவரவேண்டும் என்பது தான் நமது வாதம். உதாரணமாக போட்டான் என்பது தமிழுக்கு புதிய சொல் இதற்கு ஆற்றல் சிப்பங்கள் என்று தான் தமிழில் கொண்டுவரவேண்டும் என்பதல்ல எனது வாதம். ஒலிக்க தமிழில் தனி எழுத்து சேர்க்க வேண்டும் என்பதை ஏற்க முடியவில்லை. அதே போல தான் கடவுள் துகள்(அடிப்படை துகள்) என்பதை கிக்சு போசன் என்று தமிழில் எழுதமுடியாத என்ன? அதை தானே கேட்கிறோம்.//

தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் ஒலி மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது !

“ஹிக்ஸ் போஸான்” (Higgs Boson) என்று இந்திய விஞ்ஞான மேதை சந்தியேந்திர நாத் போஸ் நினைவில் உள்ள கடவுள் துகளை மிகவும் கொச்சையாகப் பச்சைத் தமிழில் “கிக்சு போசன்” என்று எழுதி விஞ்ஞானிகள் ஹிக்ஸ், போஸ் இருவரது உன்னத வரலாற்றுச் சின்னங்களையே அழித்து விட்டீர்கள் !!!

காலுக்கு ஏற்றவாறு செருப்பு தயாரிக்க வேண்டுமே தவிரச், செருப்புக்கு ஏற்றபடிக் காலை நறுக்குவது அறிவுடைமை ஆகாது.

நாமிருவரும் எதிர்த் திசைகளில் போகிறோம். நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதே சமயத்தில் நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வற்புறுத்த வில்லை.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

21 10 2008
bmurali80

இதே போல் ஒரு மகா யுத்தம் ஒன்று நடந்தது வேறொரு பதிவில். எனவே தான் நான் இங்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எதுக்கு வீண் வம்பு:

http://blog.ravidreams.net/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/

http://blog.ravidreams.net/f/

24 10 2008
அறிவகம்

மதிப்பிற்குரிய திரு. செயபாரதன் அவர்களுக்கு..

பணிநெருக்கடி காரணமாக உடனடியாக பதில் எழுத முடியவில்லை. வருந்துகிறேன்.

//தர்க்கமிடும் போது தர்க்கத்தை விட்டு விட்டு தனிப்பட்டுத் தமிழரைத் தாக்குவது அநாகரீகம். அவ்விதம் வலையில் தாக்கும் போது தாக்குபவர்தான் தன் முகத்தில் கரியைப் பூசிக் கொள்கிறார்.//

இந்த பதிவில் தனிப்பட்ட யாரையும் நான் தாக்கி எழுதவில்லை. உதாரணத்திற்காக ஒருவரை சுட்டி காண்பிப்பது அவரை மட்டும் குறிப்பது அல்ல. அவரைபோல ஓத்தக்கருத்துடைய அனைவரையும் குறிப்பது தான். பித்தலாட்டவாதிகள் என்பது எனக்குள் வந்த கோபத்தின் வெளிப்பாடு தான். தவறுக்கு மனப்பூர்வமாக வருந்துகிறேன். அதே நேரத்தில் என் கோபம் நியாயமற்றதாக எடுத்துக்கொள்ள கூடாது.

சொல்லும் திறன் தமிழுக்கு இல்லை என்பதை கேட்டால் தமிழை உணர்வாக கொண்டுள்ள எல்லோருக்கும் இந்த கோபம் வரும்.

//ஹிக்ஸ் போஸான் என்று இந்திய விஞ்ஞான மேதை சந்தியேந்திர நாத் போஸ் நினைவில் உள்ள கடவுள் துகளை மிகவும் கொச்சையாகப் பச்சைத் தமிழில் “கிக்சு போசன் என்று எழுதி விஞ்ஞானிகள் ஹிக்ஸ், போஸ் இருவரது உன்னத வரலாற்றுச் சின்னங்களையே அழித்து விட்டீர்கள் //

இதே பதிவிற்கான பின்னூட்டத்தில் திரு. RV அவர்களின் பின்னூட்டக் கேள்வி

// இந்த நான்கு நான்கு எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்படும் தமிழ்சொற்களை உலக அரங்கில் மதிப்பற்ற பழமைவாத சொற்களாக்குகிறார்கள் – யார்? ஒரு எடுத்துக்காட்டு சொல்லுங்களேன்!//

இந்த வினாவுக்கு விடையளிக்கும் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விரும்பவில்லை.

கிக்சு போசான் என அழைப்பது உங்களை தவிர எந்த தமிழருக்கும் கொச்சையாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

கிக்சு போசான் என்று அழைப்பதால் எந்த விதத்தில் அவர்களுடைய வரலாறு அழிக்கப்பட்டது? கிக்சு போசான் என்பது இரு அறிவியலாளர்களின் பெயர் என்று தாய்மொழியில் சொல்லிக்கொடுத்தால் தான் அவர்களது வரலாறு தெரியும். பெயரை அப்படியே எழுதுவதால் மட்டும் அவர்கள் வரலாறு தெரிந்துவிடுமா?

மதிப்பிற்குரிய ஐயா தங்களிடம் நான் வாதிட விரும்புவது

1. அறிவியல் தமிழை வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் விளக்கமுடியாதா?
2.அப்படி விளக்க முயல்வது கடினமும், காலதாமதமாகுமா?
3. அப்படியே செய்தாலும் தாறுமாறக கொச்சையாகவும் பச்சையாகவும் இருக்குமா?
4. இந்த நான்கு எழுத்துக்களை போலவே பல மெல்லெழுத்துக்களையும் தமிழில் சேர்க்க வேண்டுமா?
5. இதெல்லாம் இல்லை என்றால் தமிழ் திறன் ஆற்ற பழமைவாத மொழியாகுமா?

இந்த கேள்விகளுக்கான பதிலை தான்.

இரசாயனம் பௌதீகம், பூகோளம் என தாங்கள் படிக்கும் காலத்தில் பள்ளி கல்லூரிகளில் கற்றுக்கொடுத்தார்கள். அவை கடினமாக இருக்கிறது என்று தான் இன்று வேதியல், இயற்பியல், புவியியல் என தமிழ் படுத்தி இருக்கிறார்கள்.

உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள் எந்த சொல் எளிமையாக இருக்கிறது என. அவர்கள் சொல்லும் ஒற்றை பதில் தான் நாம் இருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் எழுத முடியாது என்பது தமிழின் இயலாமையை காட்டவில்லை. சில தமிழர்களின் இயலாமையையும் முயலாமையையும் தான் காட்டுகிறது.

உதாரணமாக வடமொழி எழுத்துக்கள் அறிமுகமில்லாத கிராமத்து தமிழர்கள் உங்களை செயபாரதன் என்று அழைப்பார்கள். தமிழ் சொற்களை திரித்து வடமொழி எழுத்துக்களோடு சேர்த்து பள்ளியில் சொல்லிக்கொடுத்ததன் விளைவு தான் இன்று செயபாரதன் என்றால் கொச்சையாக இருக்கிறது என்கிறீர்கள். ஒருவேளை வடமொழி எழுத்துக்களே உங்களுக்கு அறிமுகம் இல்லை என்றால் இன்று ஜெயபாரதன் என்பதை தான் கொச்சை என்பீர்கள் உண்மையா இல்லையா?

அறிவியலும் கணிணியும் ஆங்கிலத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஆங்கிலச்சொற்கள் எல்லாம் S ஒலியை முதன்மைபடுத்தி தான் வரும். உதாரணமாக தமிழில் பஞ்சு என்பதை SPONGE என்பார்கள். அதற்காக ஸ் என்ற எழுத்தை தமிழில் சேர்க்க வேண்டும் என வாதிடுவது ஆங்கிலத்தை வளப்படுத்தவே அல்லாமல் அறிவியலை வளப்படுத்த அல்ல! உண்மையா இல்லையா?

ஒரு காலத்தில் பள்ளி கல்லூரிகளில் எல்லாம் வடமொழிஎழுத்துக்கள் கற்பிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் கற்றவர்கள் எல்லாம் வடமொழி எழுத்துக்களை தாராளமாக பயன்படுத்துகிறார்கள். கல்லாதவர்களுக்கு வடமொழி எழுத்தின் வாசமே தெரியாது. அதற்காக கல்லாதவர்கள் வடமொழி எழுத்துகள் இன்றி சொல்லும் சொல்லெல்லாம் கொச்சையாகி விடுமா?

தனித்தமிழ் பேசினால் உடனே தமிழ் காப்பாளி பட்டமும் அதற்கு அடுத்தாற்போல தமிழ் கிருக்கி என்றும் தமிழ் தீவிரவாதி என்றும் பட்டங்கள் கிடைப்பது வரலாற்றில் புதிதொன்றும் அல்ல.

உண்மையில் தனித்தமிழ் போராளிகளால் தான் இன்று எளிமையான தமிழே கிடைத்திருக்கிறது என்பது தாங்கள் தமிழின் வரலாற்றை படித்தீர்களானால் தெரிந்து கொள்ள இயலும்.

இந்திய சுதந்திரத்துக்கு முன்பு, நாம் தனித்து சுதந்திரமாக நிற்க வேண்டும் என போரடியவர்கள் 20 சதவீதம் «ப்ர் தான். ஆங்கிலேயர் ஆட்சி செய்தால் செய்துவிட்டு போகட்டுமே, அதற்காக ஏன் இவ்வளவு கடினப்பட வேண்டும். எதற்காக இந்த கிருக்கர்கள் குதிக்கிறார்கள் என்று எண்ணியவர்கள் தான் அதிகம்.

ஆனால் கேலி, கிண்டல், அடி, சிறை, மரணம் என அனைத்தையும் தாண்டி பொதுமக்களுக்கு தனி சுதந்தரத்தை புரியவைத்து வென்றவர்களால் தான் இன்று சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

அதே போல தான் வடமொழி எழுத்துக்கள் இருந்தால் இருந்து விட்டு போகட்டும், ஆங்கில சொற்களை மாற்றுவது கிருக்குதனம் என வாதிடுபவர்கள் தான் அதிகம். வடமொழி எழுத்துக்கள் இல்லாமலும் தமிழால் தனித்து சுதந்திரமாக வாழ முடியும் என போராடுபவர்களுக்கு இந்த தமிழ் சமுதாயம் தரும் பட்டம் பைத்தியம், வீண்வேலை என்பது தான்.

ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் தனித்தமிழ் வேண்டும் என்று போராடுபவர்கள் காலங்கள் தோறும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் இறந்து 2 ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும்.

//தமிழ் வலுவான மொழி. 4000 ஆண்டுகள் வாழ்ந்த தமிழ் அழியாது. யாரும் தமிழை அழிக்க முடியாது. எத்தனை ஆங்கிலச் சொற்கள் கலந்தாலும் தமிழ் அழியாது. //

தங்கள் கூற்று படி தமிழ் நிச்சயம் சாகாது. ஆனால் இன்று சமசுகிருதம் எப்படி இந்தியாகவும், இன்னபிற இந்திய மொழிகளாகவும் திரிந்து போனதோ அதே போல தமிழும் தமிங்லீஷ், கிருந்ததமிழ் புதுதமிழ், பழைய தமிழ், தனித்தமிழ் என பலவாக திரிந்துவிடும்.

இன்று திருநெல்வேலி தமிழும், கோவை தமிழும், சென்னை தமிழும், சிங்கை தமிழும், கனடா தமிழும், ஈழத்தமிழும் செந்தமிழ் இலக்கணத்திலும்- எழுத்திலுமாவது ஒன்றினைகிறது. வருங்காலத்திலோ ஆளுக்கொரு எழுத்தை பிடித்துக்கொண்டு அவரவர் தமிழை காப்பாற்ற வேண்டியது தான்.

//கிரந்த எழுத்துக்கள் எதுவும் இல்லாமல், ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் விஞ்ஞானத் தமிழ் நூல்களைப் படைக்க முடியாது//

//ஆக்ஸிஜனை உயிர்வளி என்றும் கோல்டைத் தங்கம் என்றும், சில்வரை வெள்ளி என்றும் ஐயர்னை இரும்பு என்றும் கவிதையில் காவியத்தில் நன்கு எழுதலாம். ஆனால் அவற்றை இரசாயச் சமன்பாடுகளில் இடும்போது முரண்பாடுகள் நேரும்.//

தாங்கள் பள்ளி கல்லூரி காலத்தில் வேண்டுமாயின் இது இயலாமல் போயிருக்கலாம். இன்று எங்கள் பாடபுத்தகங்களில் – தங்கமுலாம் பூசுவது எப்படி?, வெள்ளி நைட்ரேட், இரும்பு டை ஆக்சைடு, என்று தான் வேதியல் சமன்பாடுகளில் சொல்லிக்கொடுக்கிறார்கள். மேலும் ஆக்சைட் என்பதற்கும் ஆக்சைடு என்பதற்கும் உள்ள பொருள வேறுபாடும் தமிழில் உச்சரிப்பில் தெளிவாகவே இருக்கிறதே. ஏராளமான அறிவியல் நூல்கள் எளிய தமிழில் வந்துவிட்டது என்ற ஆதாரத்தை கொண்டு தான் உங்கள் கருத்துக்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.

நடப்பு நிலை இப்படி இருக்கும் போதே அறிவியலை வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் எளிய தமிழில் சொல்ல முடியாது என்ற கருத்தை எப்படி ஏற்பது?

//மெல்லோசை எழுத்துக்கள் விஞ்ஞானத்துக்கும் மற்றுமல்ல, கர்நாடக சங்கீத இசைகளுக்கும் தேவைப்படுகின்றன. செவிக்கினிய தஞ்சாவூர் தியாகராஜர் கீர்த்தனைகளுக்கு எல்லா வகை மெல்லிசை எழுத்துக்களும் வேண்டும். இல்லா விட்டால் நமது இசைத்தமிழ் அவற்றின் சேர்க்கை யில்லாமல் பிற்போக்கு இசை ஆகிவிடும்.
ஒலிபெயர்ப்பு இசைத் தமிழுக்கும் அவசியம//

இசை உலகில் மிகவும் புகழ்பெற்ற பி. சுசீலா அவர்கள் ஒரு பேட்டியில் கூறியது:

கேள்வி: எப்படி உங்களால் தமிழ், தெலுங்கு, இந்தி, உட்பட அனைத்து மொழிகளிலும் பாடி புகழ்பெற முடிகிறது.

பதில்: உச்சரிப்பு தான் முக்கியம். அந்ததந்த மொழிகளில் அந்தந்த உச்சரிப்புகளோடு பாடும்போது தான் அந்த வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது. இனிமையும் வலிமையும் கூடுகிறது.

இந்த தத்துவத்தை தான் இன்றைய பல புகழ்பெற்ற பாடகர்களும் பின்பற்றி வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். பாடல்களுக்கு இசையும் குரல் வளமும் தான் முக்கியம். எந்த எழுத்தில் எழுதப்படுகிறது என்பது அல்ல.

உதாரணமாக: ஒரே பாடலை கிறித்துவர்கள் ஒரு இசையிலும், இசுலாமியர்கள் ஒரு இசையிலும் பாடுவார்கள்.

– குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா – இந்த பாடலை நீங்கள் ஒரு உச்சரிப்பிலம் நான் ஒரு உச்சரிப்பிலும், பாடகர் சித்ரா ஒரு உச்சரிப்பிலும் பாடுவார். ஒவ்வொரு உச்சரிப்புக்கும் ஒரு எழுத்து கொடுத்தால் பாடல் வரிகளை விட எழுத்துக்கள் தான் அதிகமாக இருக்கும்.

சமசுகிருத பாடலை சமசகிருத உச்சரிப்பில் பாடினால் தான் இனிமையாக இருக்கும். அதே போல தமிழ் பாடலை தமிழ் உச்சரிப்பில் பாடினால் தான் நன்றாக இருக்கும்.

தியாகராசர் கீர்த்தனைகளை தலையாட்டி ரசிப்பதற்கு வெறும் இசை ரசனை மட்டும் போதும். அதன் அர்த்தங்களை புரிந்துகொள்வதற்கு தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும்.

அது போல தான் அறிவியலும். அறிவியலின் பிரமாண்டங்களை கண்டு விழிபிதுங்க தாய்மொழி தேவையில்லை, படங்கள் போதும். ஆனால் அதன் உண்மைகளை அறிந்து, அலசி, ஆராய எளிய தாய்மொழி கல்வி தேவை.

தங்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதத்தை தொடரவே விரும்புகிறேன்.

24 10 2008
அறிவகம்

திரு. RV…

//தமிழ் உச்சரிப்புகள் கெடுகிறது – எப்படி? எல்லாரும் ஆஷ்டுகுஷ்டி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்களா? (வேட்டி-வேஷ்டி என்று ஆரம்பிக்காதீர்கள். எனக்கு தெரிந்து வேஷ்டி என்று குறைந்த பட்சம் நூறு ஆண்டுகளாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்)//

உண்மை தான்! ஆனால் யார் சொல்கிறார்கள் என்பதில் தான் விவாதம் இருக்கிறது. வடமொழி எழுத்துக்கள் கலந்து கல்வி கற்ற தமிழர்கள் தான் சொல்கிறார்களே தவிர வடமொழி எழுத்துக்கள் அறியாத தமிழர்கள் வேட்டி என்று தான் வேட்டி உடுத்த துவங்கிய நாள் முதல் இன்று வரை சொல்லி வருகிறார்கள். படிப்பவர்க்ள எல்லாம் வேஷ்டி என்றே படித்து பேச துவங்கி விட்டால் வேட்டி என்ற தமிழ் சொல் அழியாதா? இது தான் எனது ஆதாங்கம்.

ஒரு வேளை தனித்தமிழ்வாதிகள் மணிபிரவாளத்திற்கு எதிராக போராடாமல் இருந்திருந்திருந்தால் ஆட்டு குட்டியும் நிச்சயம் ஆஷ்டு குஷ்டியாயிருக்கும். வடமொழி எழுத்துக்கள் கலந்த எல்லா சொற்களும் சமசுகிருத சொற்களாகவே திரிக்கப்படுகிறது. அது தான் வேதனை. இந்த எழுத்துக்கள் இல்லாமலும் தமிழில் எழுதவும் பேசவும் இயலும் போது ஏன் அதை தவிர்க்க கூடாது?

//பல தமிழ் வார்த்தைகள் அழிகிறது – எப்படி? அம்மா என்பதற்கு பதிலுக்கு எல்லாரும் மாதாஸ்ரீ என்று அழைக்கப்போகிறார்களா? எல்லாரும் மம்மி என்றல்லவா அழைக்கிறார்கள்? ஆங்கில மோகம் இதை விட பெரிய பிரச்சினையாக உங்களுக்கு தெரியவில்லையா?//

ஆம் உண்மை தான். சமசுகிருதம் படித்தவர்களை மட்டுமே பாதித்தது. ஆனால் ஆங்கிலம் கிராமங்கள் வரை பாதித்து வருகிறது. நிச்சயம் உடனடியாக களையப்பட வேண்டியது தான். இந்த பதிவு எழுத்துக்களை சேர்ப்பது குறித்த விவாதம் என்பதால் அதுபற்றி குறிப்பிடவில்லை.

//புதிய சொல்லாக்கங்களே இல்லாமல் போகிறது – என்னங்க, கொஞ்சம் விட்டால் காலரா பரவுகிறது என்பீர்கள் போலிருக்கிறதே? இந்த நாலு எழுத்துக்களுக்கும், புதிய சொல்லாக்கங்களுக்கும் என்ன தொடர்பு?//

உலகமாயமான இந்த காலகட்டத்தில் பல துறைகளை சார்ந்த புதியகண்டுபிடிப்புகளுக்கான பெயர் சொற்களை எழுத இந்த நான்கு எழுத்துக்களை வைத்திருப்பதால் அந்த சொல்லை அப்படியே எழுதிவிட்டு போகிறோம். உதாரணமாக photon என்பதை ஆற்றல் சிப்பங்கள் எனவும் ஒளிதுகள்கள் எனவும் மொழிபெயர்க்கும் போது புதிய சொற்கள் கிடைக்கிறதே.

ஆங்கிலம் எல்லா மொழி சொற்களையும் அப்படியே எடுத்துக்கொள்ளவில்லை. அப்படி எடுத்திருந்தால் ஆங்கிலம் என்ற மொழியே இல்லாமல் போயிருக்கும்.

பிற மொழி சொற்களை எடுக்கும் போது தனது எழுத்து உச்சரிப்புக்கு ஏற்றது போல மாற்றிக்கொண்டது.

உதாரணமாக: அரிசி-rice, சாக்கு-sack, தேக்கு- teak, தமிழ்-tamil, சந்தனம்-sandal, சப்பு-sip, கட்டுமரம்-catamaran, கூலி-cooly, பரல்-pearl, நாவாய்-navy, இஞ்சி-Zinger, எட்டு-eight, தயிர்-tyre, புதர்-bush, பூசை-puja, எருக்கு- yercum, தோனி-dhoney ,குயில்-koel இப்படி சொல்லக்கொண்டே போகலாம்.

இப்போது சொல்லுங்கள் ஆங்கிலம் பிற மொழி சொற்களை அப்படியே எடுத்துக்கொண்டதா? அல்லது அவர்களது மொழி உச்சரிப்புக்கு ஏற்றது போல எடுத்துக்கொண்டதா? நாம் மட்டும் ஏன் வடமொழி எழுத்துக்களை துணைக்கு அழைத்துக்கொண்டு ஆங்கிலத்தை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும்? அதனால் ஆங்கில சொல்தான் நமக்கு கிடைக்கிறதே தவிர தமிழ் சொல் எங்கே கிடைக்கிறது?

அரிசி என்பதை ஆங்கிலம் அப்படியே அரிசி என எடுத்திருந்தால் rice என்ற சொல் ஆங்கிலத்துக்கு கிடைத்திருக்குமா? உலகிலுள்ள எல்லா மொழி சொற்களையும் அப்படியே எடுக்க வேண்டும் என்றால் ஆங்கிலத்துக்கு 26 எழுத்துக்கள் போதாது. அதே போல தான் தமிழுக்கும்.

நாம் அந்த நான்கு எழுத்துக்களை அனுமதிப்பதால் புதிய சொற்களும் வருவதில்லை மேலும் இன்ன பிற எழுத்துக்களையும் ஏன் சேர்க்க கூடாது என்ற கேள்வி வருகிறது அல்லவா?

//ஒரே ஒரு practical, personal, problem. தமிழ் தாய் மொழியாக இல்லாதவர்களுக்கு க என்ற ஒரே எழுத்து இரு வகை ஒலிகளை குறிப்பிடுவது தமிழ் கற்றுக்கொள்வதை இன்னும் கஷ்டமாக்கும் என்று நினைக்கிறேன். நான் அமேரிக்காவில் வசிக்கிறேன். என் பெண்களுக்கு இன்னும் தமிழ் எழுதப் படிக்க தெரியாது. அவர்கள் நிச்சயமாக இதனால் குழம்புவார்கள்.//

இதை என்னாலும் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு மொழி தெரிந்தவர் இன்னொரு மொழி கற்கும் போது தெரிந்த மொழியோடு ஒப்பிட்டு தான் கற்பார். தாய்மொழியல் நான்கு க வைத்திருப்பவர்களுக்கு ஒரு க கற்பது கடினம் அல்ல. ஆனால் ஒரு க வைத்திருப்பவர்கள் நான்கு கற்பது தான் கடினம். தமிழ் கற்பது எளிது. தமிழின் உச்சரிப்பை கற்பதும் எளிது. இதை மலையாள, கன்னட நண்பர்களே சொல்ல கேட்டிருக்கிறேன்.

//இந்த நான்கு நான்கு எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்படும் தமிழ்சொற்களை உலக அரங்கில் மதிப்பற்ற பழமைவாத சொற்களாக்குகிறார்கள் – யார்? ஒரு எடுத்துக்காட்டு சொல்லுங்களேன்!

எதிர்காலத்தில் இந்த நான்கு எழுத்துக்கள் இல்லாமல் தமிழே இல்லை என்ற நிலையை உருவாக்குகிறார்கள். – யார்? எங்கே? எப்படி?//

வடமொழி எழுத்துக்களை நீக்க எதிர்ப்பவர்கள், வலைபதிவுகளிலும் ஏராளமானோர் இருக்கிறார்கள். தனிப்பட்ட ஒருவரை சுட்டி காண்பித்தால் வருத்தம் தான் மிஞ்சம். அதனால் தான் பொதுவாகவே குறிப்பிட்டு வருகிறேன்.

//நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வாதமும் வீரமாமுனிவருக்கும் பெரியாருக்கும் கூட பொருந்தும்! என் தமிழை மாற்ற இந்த வெள்ளைக்காரனுக்கு என்ன திமிர், இந்த கன்னடக்காரனுக்கு என்ன உரிமை என்று உங்களைப் போலவே யாராவது வாதாடி இருக்கலாம்!//

வீரமாமுனிவர் தான் தனித்தமிழ் இயக்கத்தையே ஆரம்பித்தவர். சில தமிழர்களே தன் பெயரை தமிழில் சொல்வதை விரும்பாத நிலையில் தன் constantine joseph beschi என்ற பெயரை அப்படி தமிழில் எழுதாமல் வீரமாமுனிவர் என தமிழ்படுத்திய தங்கத்தமிழர் அவர்.

ஓலைசுவடி எழுத்தை காகித எழுத்துக்களாக மாற்றியவர் வீரமா முனிவர். அதுவும் தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்டு தானே தவிர எந்த எழுத்தையும் சேர்க்கவும் இல்லை. நீக்கவும் இல்லை. அதே போல பெரியார் தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்டு செய்த சீர்திருத்தங்கள் மட்டுமே வெற்றி பெற்றது.

வீரமாமுனிவர் செய்த தமிழ்சீர்திருத்தத்தை ஒப்பிட்டு பேசும் அளவுக்கு தகுதியுடையோர் இன்று யாருமில்லை. அந்த தமிழ் மகனுக்கு இந்த பதிவு மூலமும் ஒராயிரம் வீரவணக்கங்கள்.

நான் தமிழில் சீர்திருத்த்தை எதிர்க்கவில்லை. தமிழை சீர்குலைப்பதை தான் எதிர்க்கிறோம். தமிழ் இலக்கணத்திற்கு உட்படாத வடமொழி எழுத்துகளை சேர்ப்பது தமிழ் சீர்திருத்தமா? சீர்குலைப்பா?

விரிவாக அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

24 10 2008
RV

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் ஒன்றும் இல்லாத விஷயத்தை பற்றி வருத்தப்படுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

முதலில் வீரமாமுனிவர் செய்த சீர்திருத்தங்களை பற்றி: அவர்தான் இந்த நெடில் ஓகாரம், குறில் ஓகாரம் ஆகியவற்றுக்கான இந்த துணை எழுத்துக்களையும், ஒற்றெழுத்துக்களுக்காந புள்ளி வைப்பதையும் கொண்டு வந்தார் என்று நினைவு. (சரியாக நினைவில்லை, நான் சொல்வது தவறாக இருக்கலாம்.) பெரியார் கொண்டு வந்த தமிழ் எழுத்து சீர்திருத்தங்கள் தெரிந்தவைதான். நீங்கள் தமிழில் எந்த மாற்றமும் வரக்கூடாது, பல நூறு ஆண்டுகளுக்கு முன் வந்த மாற்றங்களும் அழிக்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறீர்கள். வீரமாமுனிவர் காலத்தில் நீங்கள் இருந்தால், இந்த சீர்திருத்தங்களை பற்றி என்ன சொல்லி இருப்பீர்கள்?

தமிழி “வட மொழி” எழுத்துகள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன். அவை இப்போது வட மொழி எழுத்துகளே அல்ல, தமிழ் எழுத்துகள்தான் என்று நினைக்கிறேன். (இந்த வரி வடிவத்தை நீங்கள் சமஸ் கிருதத்தில் காண்கிறீர்களா என்ன?)

ஃபோடான் பற்றி சொல்லி இருந்தீர்கள். முதலில் இந்த ஒலி வடிவத்தை தமிழில் எழுத முடியும். அப்படியே நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக்கொள்வோம். யார் எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் போன்ற வார்த்தைகளை தமிழில் கொண்டு வராமல் தடுத்தது? புதிய சொல்லாக்கங்கள் உருவாவதும் உருவாகாமல் இருப்பதும் தமிழில் உள்ள ஒலி வடிவங்கள் இருப்பதை பொறுத்து அல்ல. நீங்கள் நினைப்பது தவறு.

அப்படியே எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் என்று எழுதினால் என்ன குறைந்து விடும்? கார், பஸ், காஃபி போன்றவை தமிழில் அப்படியே பயன்படுத்தப்பட வேண்டும், அதுதான் என்று நான் நினைக்கிறேன். ஆற்றல் சிப்பங்கள் என்பது கேட்க அழகாக இருக்கிறது. ஆனால் உயர் கல்வி ஆங்கிலத்தில் படிக்கப்படும் இந்நாட்களில் என் மனதில் நான் ஒவ்வொரு முறையும் இதை மொழி பெயர்த்துக் கொள்ள வேண்டும். Inefficient! உதாரணமாக ஆயத்தொலை வடிவ கணிதம் என்றால் என்ன தெரியுமா? (நான் படிக்கும் காலத்தில் பள்ளிகளில் தமிழில் கணக்கு படிப்பவர்கள் இதை படித்தார்கள்) Analytical Geometry. இப்படி கஷ்டப்பட்டு மொழி பெயர்ப்பதில் என்ன பயன்? குழம்பி என்றும் கொட்டை வடிநீர் என்றும் காஃபிக்கு வேறு பெயர் கண்டுபிடிப்பானேன்? உருவாக்கப்படும் எல்லா சொல்லாக்கங்களும் நல்ல சொல்லாக்கங்கள் அல்ல. அப்படி நன்றாக இருந்தாலும் அது மக்கள் மத்தியில் பரவும் என்று சொல்ல முடியாது. தேநீர் சரி. சாலை சரி. காரை விட்டுவிடுங்கள்! ஒரு வார்த்தை பரவலாவதும் ஆகாததும் தமிழ் அறிஞர்கள் கையில் இல்லை! பீட்டர் விடுவது என்பது அருமையான சொல்லாட்சி. தமிழ் அகராதிகள் இதை அங்கீகரிக்க வேண்டும். கானா என்பது தமிழ் வார்த்தை இல்லைதான், அதனால் என்ன? (ஜன்னல் கூட போர்ச்சுகீசிய வார்த்தை என்று கேள்வி)

நான் அறிஞன் இல்லை. சாதாரண தமிழன். நான் பேசுவதும் எழுதுவதும் அடுத்தவர்களுக்கு புரிய வேண்டும். என்னை பொருத்த வரையில் மொழியின் முதல் தேவை அதுதான். தமிழில் எழுதும்போது எனக்கு சரியான தமிழ் வார்த்தை கிடைத்தால் தமிழ் வார்த்தையை பயன்படுத்துவேன். இல்லாவிட்டால் அதற்கு சரியான ஆங்கில வார்த்தை கிடைத்தால் அதை பயன்படுத்துவேன். இல்லை என்றால் ஹிந்தி, அதுவும் இல்லை என்றால் தெலுங்கு, ஏதோ ஒன்று. முடிந்த வரை தமிழ் பயன்படுத்துவேன், அவ்வளவுதான். உதாரணமாக பிந்தாஸ் என்ற ஹிந்தி வார்த்தைக்கு எனக்கு எந்த மொழியிலும் சரியான வார்த்தை கிடைக்கவில்லை. இதற்காக வார்த்தையை உருவாக்கிக்கொண்டிருக்க முடியுமா என்ன?

காலப்போக்கில் வேட்டி என்ற வார்த்தை அழிந்து வேஷ்டி என்று ஆகிவிட்டால் என்ன நஷ்டம்? ஒரு தமிழ் வார்த்தைக்கு பதிலாக இன்னொரு தமிழ் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது, அவ்வளவுதான். இப்போது தெலுங்கர்களை தவிர யாரும் செப்பு என்று சொல்வதில்லை, எல்லாரும் சொல் என்றுதான் சொல்கிறோம். என்ன தவறு? நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்தப்பட்டும் வேஷ்டி என்ற சொல்லை அங்கீகரிக்காததுதான் எனக்கு தவறாக தெரிகிறது!

ஆங்கிலம் எப்படி வார்த்தைகளை திரித்தது என்று சொல்லி இருந்தீர்கள். (eight “எட்டு” என்பதிலிருந்து வந்தது என்பது ஆச்சரியமாக இருந்தது. இந்த தகவல் சரிதானா?) ஆங்கிலம் எப்படி திரித்தால் நமக்கென்ன? எது நமக்கு சரியாக படுகிறதோ அதை அல்லவா நாம் செய்ய வேண்டும்? அவர்கள் வாயில் “தமிழ்” நுழையவில்லை, “டமில்” ஆக்கிவிட்டார்கள். நம்மால் உச்ச்சரிக்கக்கூடியதை நாம் ஏன் மாற்ற வேண்டும்?

தமிழ் கற்பதை பற்றி சொல்லி இருந்தீர்கள். ஒரே எழுத்தை இரண்டு ஒலிகளாக சரியாக உச்சரிக்க வேண்டும் என்றால், பேச்சுத்தமிழ் நன்றாக இருக்க வேண்டும். நிறைய வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும். ஒரு அமெரிக்கர் இதை சுலபமாக செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? சுசித்ரா என்ற பெயரில் அடுத்தடுத்த ஒலிகள் வேறு விதம் – இது கஷ்டம் இல்லையா? இது கஷ்டம் என்பதால் இன்னும் 40 எழுத்துகள் வேண்டும் என்று நான் சொல்லவில்லை. கஷ்டம் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

வடமொழி எழுத்தகளை நீக்குவதை எதிர்ப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். நானும் அதில் ஒருவன்தான். ஆனால் இதில் யார் இந்த நான்கு எழுத்து இல்லாத தமிழ் சொற்களை உலக அரங்கில் மதிப்பற்ற சொற்கள் ஆக்குகிறார்கள், யார் இந்த எழுத்து இல்லாமல் தமிழ் இல்லை என்று ஆக்குகிறார்கள் என்பதுதான் என் கேள்வி. சரி நீங்கள் இப்படி பலரை பார்த்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் ஆயிரத்தில் ஒருவரா? நூற்றில் ஒருவரா? அவர்கள் ஏதாவது உயர் பதவிகளில், தமிழ் கழகங்களில், மந்திரி சபைகளில், பல்கலைகழகங்களில், பிரபல பத்திரிக்கைகளில், பிரபல இணைய தளங்களில் இருக்கிறார்களா? எனக்கு தெரிந்து இணைய தளத்தில் பிரகிலுப்தம் ஒருவர்தான் தமிழுக்கு மேலும் ஒலி வடிவங்கள் வேண்டும் என்று சொன்னார். இந்த 4 எழுத்துகள் இல்லாமல் தமிழ் இல்லை என்று அவரும் சொல்லவில்லையே? தமிழ் நம் பாட்டன் சொத்து மட்டும் அல்ல, அவர் பாட்டன் சொத்தும் கூடத்தான். அவரது கருத்துகளை நிராகரியுங்கள், அது உங்கள் உரிமை. (எனக்கும் அந்த கருத்துகளில் உடன்பாடு இல்லை). அதற்காக அவருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா என்ன?

கிக்சு என்றால் ஹிக்ஸ் என்று எனக்கு ஜெயபாரதன் எழுதியதை படித்த பிறகுதான் புரிந்தது. என் பெயரை அமெரிக்கர்கள் சிதைக்கும்போது எனக்கு வரும் வெறுப்பு ஹிக்ஸுக்கு வராது என்று நினைக்கிறீர்களா?

26 10 2008
Jayabarathan S

அன்புள்ள குழலி அவர்களுக்கு,

//கிக்சு போசான் என்று அழைப்பதால் எந்த விதத்தில் அவர்களுடைய வரலாறு அழிக்கப்பட்டது? கிக்சு போசான் என்பது இரு அறிவியலாளர்களின் பெயர் என்று தாய்மொழியில் சொல்லிக் கொடுத்தால் தான் அவர்களது வரலாறு தெரியும். பெயரை அப்படியே எழுதுவதால் மட்டும் அவர்கள் வரலாறு தெரிந்துவிடுமா?//

ஆங்கிலம் உலக மொழி. இப்போது ஆங்கிலப் பேரகராதிகளில் விஞ்ஞானிகளின் பெயர்கள் அப்படியே சேர்க்கப்படுகின்றன. ஹிக்ஸ், ஹெர்செல், ஐன்ஸ்டைன், காஸ்ஸினி, லாப்பிளாஸ், அதுபோல் மற்ற பெயர்கள் ஸ்டானின், ஸ்புட்னிக், ஸ்டிரான்சியம், ஸ்பெய்ன் போன்ற பெயர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகின்றன. தமிழ்ப் பேரகராதிகளிலும் அப்படியே பெயர்கள் இருந்தால் பார்ப்போருக்குத் தொடர்பாகவும் உடனே பெயரைப் புரியவும் வசதியாக இருக்கும். வெவ்வேறு உச்சரிப்பில் எழுதப்படும் பெயர்கள் கிச்சு (ஹிக்ஸ்) போல் குழப்பம் உண்டாக்கும். ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதிகளுக்குள் ஒரு நல்ல தொடர்பு உண்டாகும்.

ஐக்கிய தேசங்களின் பேரவை (United Nations), அகிலவலை இணைப்புகள், உலக வாணிபங்கள், விஞ்ஞான ஆய்வுக்கூட்டு முயற்சிகள் பெருகி வரும் இக்காலத்தில் உலகம் சுருங்கி ஒரு பொரி உருண்டை ஆகிவிட்டது. தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் ஒரு பாலம் அமைக்கக் கிரந்த எழுதுக்கள் நிச்சயம் பெருமளவில் உதவி செய்யும்.

பள்ளிச் சிறுவர்கள் மேற்படிப்பை ஆங்கிலத்தில் படிப்பதற்கும், உலக நாடுகளுக்குப் பயணம் செய்து பழகும் போதும் இந்தச் சொற்களைச் சிறு வயது முதலே பள்ளிக் கூடங்களில் ஒழுங்கான உச்சரிப்பில் தெரிந்திருந்தால் பேசுவதற்கு நல்லது என்று நான் நினைக்கிறேன். அப்படித் தேவையில்லை என்றால் அது உங்கள் உரிமை. ஆனால் மற்ற தமிழ்ப் பிள்ளைகள் கிரந்தச் சொற்களில் முறையான உச்சரிப்பில் படிக்கக் கூடாது என்று கட்டளையிடவும் தடுக்கவும் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நானும் அப்படித்தான் எழுத வேண்டும் என்று மற்றவரை வற்புறுத்தவில்லை.

அப்படித்தான் எழுத வேண்டும் என்று வாதத்துக்கு நீங்கள் வருவதால் உங்களைத் தமிழ்க் காப்பாளி என்று போற்றினேன். தமிழ் உங்களுக்கு மட்டும் சொந்த மொழியில்லை என்று சுட்டிக் காட்டி அதை விடுவிக்க விடுதலைக்கு வழி காட்டினேன்.

++++++++++++++

//இந்திய சுதந்திரத்துக்கு முன்பு, நாம் தனித்து சுதந்திரமாக நிற்க வேண்டும் என போரடியவர்கள் 20 சதவீதம் «ப்ர் தான். ஆங்கிலேயர் ஆட்சி செய்தால் செய்துவிட்டு போகட்டுமே, அதற்காக ஏன் இவ்வளவு கடினப்பட வேண்டும். எதற்காக இந்த கிருக்கர்கள் குதிக்கிறார்கள் என்று எண்ணியவர்கள் தான் அதிகம்.//

//ஆனால் கேலி, கிண்டல், அடி, சிறை, மரணம் என அனைத்தையும் தாண்டி பொதுமக்களுக்கு தனி சுதந்தரத்தை புரியவைத்து வென்றவர்களால் தான் இன்று சுதந்திரம் கிடைத்திருக்கிறது.//

//அதே போல பெரியார் தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்டு செய்த சீர்திருத்தங்கள் மட்டுமே வெற்றி பெற்றது.//

நீங்கள் எப்போது பிறந்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்கு 75 வயதாகிறது. தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மூழ்கிச் சிறை சென்று முழுக்க முழுக்கப் பங்கெடுத்த ஓர் உன்னத குடும்பத்தில் பிறந்தவன். வளர்ந்தவன். படித்தவன்.

விடுதலைப் போரில் 20% நபர்கள்தான் பங்கெடுத்தார் என்பதற்குச் சான்றுகள் உள்ளனவா ? என்னுடைய கணக்குப்படிச் சுமார் 80% மேல் என்பது. 20% நபர்கள் மட்டும் போரிட்டு ஒரு போதும் தேசம் விடுதலை
அடைந்திருக்க முடியாது.

தமிழ் நாட்டில் பெரியாரின் சுயமரியாதைக் கும்பல் போன்ற துரோகக் குழுக்கள்தான் (20% சதவீதம்) பிரிட்டீஷ்காரன் இந்தியாவை விட்டுப் போகக் கூடாது, நாட்டுக்கு விடுதலை தேவையில்லை என்று ஒதுங்கி யிருந்தவர்கள். பிறகு விடுதலை கிடைத்ததும் திராவிட நாட்டுப் பிரிவினைக்கு அடிபோட்டு ஏமாந்தவர்கள் !!!

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டிகளின் மொழி என்றவர். திருக்குறளை அந்தணர் நூல் என்று வெறுத்தவர். கம்ப இராமாயணக் காவியத்தைத் தீயில் இட்டவர். இலக்கண அகத்தியராக ஆக்கிப் பெரியாரைத் தமிழ்ப் பண்டிராக மாற்ற முயலாதீர்கள்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

26 10 2008
Jayabarathan S

அன்புள்ள குழலி,

“அறிவகம்” என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் யாரென்று எழுத ஏன் உங்களுக்கு விருப்பமில்லை ?

//மெல்லோசை எழுத்துக்கள் விஞ்ஞானத்துக்கும் மற்றுமல்ல, கர்நாடக சங்கீத இசைகளுக்கும் தேவைப்படுகின்றன. செவிக்கினிய தஞ்சாவூர் தியாகராஜர் கீர்த்தனைகளுக்கு எல்லா வகை மெல்லிசை எழுத்துக்களும் வேண்டும். இல்லா விட்டால் நமது இசைத்தமிழ் அவற்றின் சேர்க்கை யில்லாமல் பிற்போக்கு இசை ஆகிவிடும்.

ஒலிபெயர்ப்பு இசைத் தமிழுக்கும் அவசியம்//

//இசை உலகில் மிகவும் புகழ்பெற்ற பி. சுசீலா அவர்கள் ஒரு பேட்டியில் கூறியது:

கேள்வி: எப்படி உங்களால் தமிழ், தெலுங்கு, இந்தி, உட்பட அனைத்து மொழிகளிலும் பாடி புகழ்பெற முடிகிறது.

பதில்: உச்சரிப்பு தான் முக்கியம். அந்ததந்த மொழிகளில் அந்தந்த உச்சரிப்புகளோடு பாடும்போது தான் அந்த வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது. இனிமையும் வலிமையும் கூடுகிறது.//

இசைவாணி சுசீலா கர்நாடக, தியாராஜ கீர்த்தனைகளுக்குத் தமிழில் பாடத் தேவைப்படும் மெல்லோசை ஒலியைப் பற்றி எங்கே பதில் கூறுகிறார் ? என் கேள்வி என்ன ? உங்கள் பதில் மையத்தை விட்டு சுற்றி வளைத்து எங்கோ போகிறது !!!

//1. அறிவியல் தமிழை வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் விளக்க முடியாதா?//

ஓரளவுதான் (40%-50%) முடியும். விஞ்ஞானம் முழுவதையும் தனித்தமிழில் எழுத முனைவது தற்காலத்தில் இமாலய முயற்சி. விஞ்ஞானம் முன்னேறும் விரைவுக்கு ஏற்றபடிப் பன்மொழிக் கலப்புள்ள (ஆங்கிலம், வடமொழி) புதுத்தமிழில் உடனே படைப்பது எளிது. இதனால் தமிழ் மொழி ஆங்கிலமோ வடமொழியோ ஆகிவிடும் என்று பயமுறுத்த வேண்டியதில்லை.

கிரேக்க லத்தீன் போன்ற புராதன மொழிகள் போல வடமொழியில் தமிழுக்குகந்த நற்சொற்களைக் கடன்வாங்குவதில் தவறில்லை. வடமொழி வாடையை வெறுப்பவர் ஆங்கில ஆடையை மட்டும் கட்டிக் கொள்ள விரும்புவது விந்தையாக உள்ளது. தமிழரின் மதம் இந்து மதமான பிறகு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்தன. மதுரை மீனாட்சி கோயில் போன்று தமிழகத்தின் ஆலயங்கள் அனைத்திலும் வடமொழிச் சிற்பங்களும், கலாச்சார முத்திரைகளும், இதிகாச வரலாற்றுச் சின்னங்களும் ஆயிரக் கணக்கில் பொறிக்கப் பட்டுள்ளன. இமயம் முதல் குமரி வரை வடமொழியின் நீண்ட நிழல் பரவியுள்ளதே ! அவற்றை எல்லாம் முதலில் எப்படி அழிப்பீர்கள் ? நான்கு கிரந்த எழுத்துக்களிலா வடமொழி தமிழ்நாட்டில் கொடி பறக்க விடுகிறது ?

தமிழும் (80%) வடமொழியும் (10%) ஆங்கிலமும் (10%) கலப்பாக இல்லாமல் விஞ்ஞானப் படைப்புகள் எதுவும் ஆக்க முடியாது என்பது என் அழுத்தமான கருத்து.

//2. அப்படி விளக்க முயல்வது கடினமும், காலதாமதமாகுமா?//

10-20 ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்குள் விஞ்ஞானம் இரு மடங்குக்கு மேலாகப் பெருகிவிடும் !!!

//3. அப்படியே செய்தாலும் தாறுமாறக கொச்சையாகவும் பச்சையாகவும் இருக்குமா?//

கிரந்தச் சொற்களின்றி தமிழ் வார்த்தைகள் “கிக்சு போசன், மிச்சுசூப்பி, சார்ச்சு புச்சு” என்று கோமாளித்தனமாகவும், தாறுமாறாவும் இருக்கும். உங்கள் செவிக்கு இனித்தால் சரிதான் !!! ஆனால் சிறுவர்கள் இப்படிப் பெயர்களைக் கொலை செய்து, முறையற்றுக் கற்க என்ன பாவம் செய்தார்களோ ? இவர்கள் பின்னால் மறுபடியும் ஆங்கிலத்தில் கற்க மேற்படிப்புக்குப் புகும் போது தடுமாற மாட்டார்களா என்பது உங்களுக்குத் தெரியாது.

//4. இந்த நான்கு எழுத்துக்களை போலவே பல மெல்லெழுத்துக்களையும் தமிழில் சேர்க்க வேண்டுமா?//

விஞ்ஞான, இசைக் கலைகளுக்குத் தேவைப்படும் போது அவற்றைப் பயன்படுத்தினால் போதும்.

//5. இதெல்லாம் இல்லை என்றால் தமிழ் திறன் ஆற்ற பழமைவாத மொழியாகுமா?//

75 வயதாகும் நான் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப தமிழை வளைத்து எளிதாகப் புரியும்படிப் புதுத்தமிழில் 45 ஆண்டு காலமாய் எழுதி வருகிறேன். நான் புதுமைவாதி. இளவயதான (உங்கள் வயது என்ன்வோ ?) நீங்கள்தான் மாறாமல் பழைய தமிழைப் பிடித்துக் கொண்டு பழமைவாதியாகக் காட்டிக் கொள்கிறீர்கள்.

//இந்த பதிவில் தனிப்பட்ட யாரையும் நான் தாக்கி எழுதவில்லை. உதாரணத்திற்காக ஒருவரை சுட்டி காண்பிப்பது அவரை மட்டும் குறிப்பது அல்ல. அவரைபோல ஓத்தக்கருத்துடைய அனைவரையும் குறிப்பது தான். பித்தலாட்டவாதிகள் என்பது எனக்குள் வந்த கோபத்தின் வெளிப்பாடு தான்.//

//ஓத்தக்கருத்துடைய அனைவரையும்//

ஆவேசமாக ஒருவர் எழுதினால் இப்படித்தான் தமிழிருக்கும்.

விடுதலை இந்தியாவில் ஆளும் கட்சி என்றும் எதிர்க்கட்சிகள் என்றும் இருப்பதின் நோக்கம் ஒரு கட்சிக்குத் தெரிவதில் தவறுகள் இருப்பதை மறு கட்சி எடுத்துக் காட்டும். ஆளும் கட்சியில் உள்ளவரைப் போல் எதிர்க்கட்சி நபர்களும் அறிவாளிகள்தான். உங்கள் உணர்ச்சிப்படி எதிர்க்கட்சி நபர் எல்லாம் பித்தலாட்டவாதிகள். இப்படி மீண்டும் சொல்லி நியாயப் படுத்துவது ஓர் எதேட்சை அதிகாரம். உங்கள் மீதுள்ள உயர்ந்த மதிப்பை எதிராளிக்கும் அளிக்கும் மனோபாவம் உங்களிடம் இல்லாமை கண்டு வருந்துகிறேன்.

விமானத்தைக் கண்டுபிடித்தவன் ஒருவன். அதை எதிர்த்தவன்தான் பயனுள்ள ஒரு பாதுகாப்புப் பாராசூட்டைக் கண்டுபிடித்தான்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

2 11 2008
Jayabarathan S

நண்பர்களே

உங்கள் பார்வைக்கு

1. http://www.veeran.co.cc/2008/10/blog-post_16.html

2. http://www.tamilhindu.com/

சி. ஜெயபாரதன், கனடா

28 12 2008
Natkeeran

இயல்பாக கிரந்தம் கலந்து விட்ட சில சொற்களை ஏற்றுக்கொண்டால் கூட, திட்டமிட்டு சிலர் கிரந்தத்தையும் சமசுகிருத சொற்களையும் திணிக்கிறார்கள். இந்து என்று எழுதாமல் ஹிந்து என்று எழுதவேண்டும் என்கிறார்கள். தமிழின் அடிப்படை ஒலிப்புமுறை இலக்கணம் எழுத்துமுறை ஆகியவற்றுக்குக்கூட மதிப்பு தர மறுக்கிறார்கள்.

29 12 2008
செல்வா

குழலி,

உங்களுக்கு என் வாழ்த்துகள், பாராட்டுகள்! !

தமிழில் எழுதும் பொழுது தமிழில் உள்ள 247 எழுத்துகளைக் கொண்டுதான் எழுதுதல் வேண்டும். ஆங்கிலத்தில் paறைyan என்று எழுதி அவர்களை ஒப்புக்கொள்ளச் சொல்லுங்கள். ஞாnasamabaந்தn, ஞாnasEkar , paழniyappan என்றெல்லாம் எழுதி ஒப்புக்கொள்ளச் சொல்லுங்கள். இன்று ஒருங்குறியில் (யூனிக்கோடில்) எழுத முடியும்தானே.

தமிழில் எழுதும் பொழுது செயபாரதன், செயவேலன், செயகாந்தன் என்று எழுதுவதை எதிர்ப்பவர்கள் உண்மையில் தமிழை மதிக்காதவர்கள். கிரந்தம் கலந்து எழுதுவோர்கள், மற்றும் ஞாnasamabaந்தn, ஞாnasEkar , paழniyappan என்றெல்லாம் எழுத விரும்புவோர்கள், தங்களை மதிக்க வேண்டும் என்று கேட்கும் பொழுது தமிழில் வழிவழியாய் 247 எழுத்துகள் என்று இருக்கும் பொழுது அவ்வெழுத்துகளில் எழுதுவதை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். செயபாரதன், செயகாந்தன், செயவேலன் என்னும் பெயர் கொண்டவர்கள் டாய்ட்சு (செருமன் மொழி) மொழியாளர் தங்கள் பெயரை எப்படி பலுக்குவார்கள் (ஒலிப்பார்கள்) என்று கேட்டுபார்க்கட்டுமே! Yeyabarathan, Yeyakanthan, Yeyavelan என்று கூறுவார்கள். Jesus என்னும் பெயரை எசுப்பானியர் (español என்னும் எசுப்பானிய மொழி பேசுவோர். España (= [esˈpaɲa]) நாட்டு மக்கள் மொழி) எப்படி பலுக்குகிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள். எவ்வொரு சொல்லையும், அவரவர் அவரவர் மொழியின் இயல்பின்படியே ஒலித்தல்தானே இயலும். என் பெயர் செல்வகுமார் என்பதற்காக நிப்பானியர் (சப்பானியர்) செரபகுமார் கூறினால் கோவித்துக்கொள்ளக் கூடாது. ‘செயபாரதன், மற்றும் சிலர் இங்கும் பிற இடங்களிலும் வாதிடுவது புதிதல்ல ஆனால் அவை ஒரு சிறிதும் செல்லாத கருத்துகள் (கட்சி கட்டிக்கொண்டு வலுவூட்டலாம், ஆனால் அறிவடிப்படையில் செல்லாத கருத்துகள்). அறிவியலுக்கும் கிரந்த எழுத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சொற்களை, குறிகளைப் பயன்படுத்துவதில், முற்றிலும் தமிழில் எழுதுதல் இயலும், வரவேற்க வேண்டியதும்கூட. பெரிய இடர் ஏதும் இல்லை. ஐதரசன், நைட்ரசன், இசுட்ரான்சியம் என்றெல்லாம் அழகாகவும் தெளிவாகவும் எழுதலாம். ‘செயபாரதன் விடாது எசுபானியாவைச் சுட்டுகிறார். அவர்கள் தங்கள் நாட்டை España (= [esˈpaɲa], எசுப்பான்யா என்பது போல ஒலிக்க வேண்டும், “சு”கரத்தின் உகரம் மிகக்குன்றியதாகவோ, அற்றோ இருக்கலாம்). ஆங்கிலத்தில் உள்ள ஒலியன்களை மட்டுமே கொண்டு எழுதப்படும் Thooththukkudi என்னும் சொல்லை நாம் அப்படி எழுதிக்கொண்டாலும் ஆங்கிலேயன் Tooth_what என்று முழிப்பான். எல்லா ஒலியன்களும் இருந்தாலும் இப்படி மொழிக்கு மொழி இயல்புகள் மாறுவது இயற்கை. இதனை மதிக்கத்தெரியாதவர்கள், அதுவும் அறிந்தும் மதிக்க மறுபவர்களை என்னவென்று சொல்வது. தமிழ் மொழிக்கு, தன் மொழியில் அனைத்து துறைக் கருத்துகளையும் அனைத்து நிலை ஆழங்களிலும் கருத்தாட தமிழல்லா எழுத்துகள் ஒருசிறிதும் தேவை இல்லை. என்றாலும், மூல எழுத்து ஒலிகளை , அம்மொழி நூல்களைத் தமிழில் விளக்கி எழுதும்பொழுது, ஆங்கில நூல்கள் கையாளவ்து போன்று, ஒலித்திரிபுக்குறிகள் இட்டு (கீழ்ப்புள்ளி, கோடு, நெளி, பிறை போன்றவை) நூற்றுக்கணக்கான ஒலிகளை அச்சிறப்பு நூல்களில் கையாளலாம். தமிழைக் கெடுக்கும் முகமாக என் பெயர் சிரீதரன் ஆகவே சிரீ என்பதைக் குறிக்க தனி எழுத்து வேண்டும், என்பெயர் செயவேலன் எனவே முதல் எழுத்து che அல்ல Je ஆகவே அதற்காக ஒரு எழுத்து வேண்டும் என்பதெல்லாம் வன்திணிப்பு வாதம். தமிழில் எழுதும்பொழுது செயவேலன் என்று எழுதுவோர், கட்டாயம் அப்படி எழுத முழு உரிமை உண்டு. கோவித்துக் கொள்வது அறியாத்தனம். தமிழில் தமிழ்வழி எழுத யாருக்கும் முழு உரிமை உண்டு. Jeyavelan என்று எழுதிவிட்டு Yeyavelan என்று டாய்ட்சு மொழியார் கூறுவதை ஒப்புபவர்கள், அவர்கள் யாப்பான் என்று ஒலிப்பதை ஒப்புவார்கள், ஆனால் ஏன் சப்பான், நிப்பான் என்பதை எதிர்க்கிறார்கள்? Jesus என்பதை எசுப்பானியர் Hesoos என்று கூறுவதில்லையா. அவர் என்ன கோவித்துக்கொண்டு அவர்களுக்கு அருள் செய்வதில்லையா? தமிழர் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் தமிழை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உலகில் இப்படி செழிப்பாக 2500 ஆண்டுகளுக்கும் மேலாக வளமுடன் வாழும் மொழிகள் மிகச்சிலவே. குழலி உங்களுக்கு மீண்டும் என் பாராட்டுகள்! செயபாரதன் அவர்களே, உங்கள் அறிவியல் கட்டுரைகளை, வெண்பா போன்ற பா புனையும் திறமைகளை மிகப்பாராட்டும் நான் தங்கள் கிரந்த, சமசுகிருதத் திணிப்பை நட்புடனும் நேர்மையுடன் எதிர்க்கின்றேன். கிரந்தத்தைப் பயன்படுத்துங்கள், சமசுகிருத சொற்களைப் பயன்படுத்துங்கள் – நான் வேண்டாம் என்று சொல்லவில்லை, நான் அதனை எதிர்க்கவில்லை, ஆனால் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துதலும், அவை இல்லாமல் தமிழில் அறிவியல் இயலாது என்று கூறுவதெல்லாம் ஒருசிறிதும் அறிவு அடிப்படையில் செல்லாது என்பதனை உற்றுணருங்கள். எனக்கும் உலகில் உள்ள எல்லா ஒலிப்புகளையும் தமிழில் குறிக்க ஏதேனும் வசதிகள் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் நிறையவே உண்டு, ஆனால் அவை தமிழுக்குத் *தேவை* என்றொன்றும் ஒருசிறிதும் இல்லை. அவை இல்லாமல் தமிழில் அறிவியல் இயலாது என்பதெல்லாம் ஒரு சிறிதும் செல்லா வாதம். இவற்றை நட்புடனும் நேர்மையுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

செல்வா
வாட்டர்லூ, கனடா

29 12 2008
Jayabarathan S

நண்பர் செல்வா,

வணக்கம். நாம் இருவரும் முன்பே தர்க்கமிட்ட தலைப்புதான் இது.

கிரந்தச் சொற்கள் தேவையான போது கலக்காமல், வடமொழிச் சொற்களே எதிலும் இல்லாமல் விஞ்ஞானக் கட்டுரைகள் யார் எழுதி வருகிறார் என்பதற்குச் சான்றுகள் காட்டுங்களேன். அவ்விதம் எத்தனை கட்டுரைகள் உள்ளன ?

திண்ணையிலும், என் வலையிலும் 500 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதிருக்கிறேன். பலர் ஆதரித்து வரவேற்றிருக்கிறாரே தவி்ர யாரும் உங்களைப் போல் தமிழ் சி்தைந்து போனதாகக் குறை கூறவில்லை.

எளிதாகப் புரியும் அத்தகைய புதுத்தமிழில் உயர்ந்த விஞ்ஞானக் கருத்துக்களைச் சிறப்பாக உள்ளதை உள்ளபடி உச்சரித்து எழுதி விளக்க ஏதுவாகிறது. ஜப்பான்காரனும், ஜெர்மானியனும், சைனாக்காரனும் தமிழை எப்படி எழுதினால் நமக்கென்ன ?

உங்களுக்குப் பிடிக்கா விட்டால் என்ன ? உலகத் தமிழருக்குப் பிடிக்கிறதே ! அது போதும் எனக்கு.

நட்புடன்,
சி, ஜெயபாரதன்,
கிங்கார்டின்,
அண்டாரியோ,
கனடா

30 12 2008
செல்வா

அன்புள்ள நண்பர் செயபாரதன் அவர்களே,

வணக்கம். உங்கள் மறுமொழி கண்டு மகிழ்ச்சி.
மறுமொழிக்கு நன்றி.

உங்களுடைய அருமையான எழுத்துகளை பாராட்டிப் போற்றுபவரகளில் நானும் ஒருவன். உங்கள் உள்மனதுக்கு
எப்படிப் படுகின்றதோ அப்படியே செய்யுங்கள். தொடர்ந்து
நீங்கள் விரும்புமாறு அறிவியல் மற்றும் பிறபல
கலைகள் பற்றியும் எழுதுங்கள்.

//கிரந்தச் சொற்கள் தேவையான போது கலக்காமல், வடமொழிச் சொற்களே எதிலும் இல்லாமல் விஞ்ஞானக் கட்டுரைகள் யார் எழுதி வருகிறார் என்பதற்குச் சான்றுகள் காட்டுங்களேன். அவ்விதம் எத்தனை கட்டுரைகள் உள்ளன ?//

பல கட்டுரைகளும் நூல்களும் உள்ளன. நலங்கிள்ளி அவர்கள் எழுதிய *காலம்* என்னும் நூலைப் படித்துப் பாருங்கள். A Brief History of Time என்னும் நூலின் தமிழாக்கம். ஆயிரக்கணக்கான கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் உள்ளன. எங்காவது பிறமொழிச்சொற்கள், கிரந்தம் இருந்தால் அவற்றை எளிதாக மாற்றி எழுதலாம் (மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்க வில்லை, ஆனால் இயலும். வடமொழி, கிரந்தம் இல்லாமல் எழுத இயலாது என்று வாதிட வேண்டாம்)

எல்லா மொழியும் வெவ்வேறு அளவுடன் பிறமொழிச்சொற்களின் கலப்புடன்தான் இயங்குகின்றன, ஆங்கிலம் உட்பட. தமிழ் அதற்கு விதி விலக்கல்ல. இறந்துபட்ட சமசுகிருதமும், இலத்தீனும் விதி விலக்கல்ல. அறிவியல் கருத்துகளுக்கு வடமொழி தேவை இல்லை. ஆங்கிலம், இலத்தீன், கிரேக்க மொழிச்சொற்கள், ஆங்கிலத்தில் வழங்குவதால் தேவைப்படலாம், ஆனால் அவைகூட கட்டாயம் தேவை என்றில்லை. பொதுப்பயன்பாடு கருதி பல சொற்களைப் பொதுமரபாக எடுத்தாள்கிறோம். எடுத்துக்காட்டாக வேதியியல் தனிமங்களின் பெயர்கள், மற்றும் வேதிப்பொருள்கள், சில அலகுகளின் பெயர்கள், லேசர், ராடார் முதலான சொற்கள் முதலியன. Higgs Boson என்னும் துகளை தமிழில் இஃசு போசான் துகள்கள் என்று சொல்ல வேண்டியிருக்கலாம். நானோமீட்டர் என்று குறிப்பிட வேண்டியிருக்கலாம். கீழ்வாய் பதின்ம எண்களின் முன்னொட்டுகளாகிய நானோ, மைக்ரோ என்பனவற்றை கீழொன்பான், கீழாறான் என்றெல்லாம் எழுதத்தேவை இல்லை. நீங்கள் அடிக்கடி பல இடங்களில் Strontium என்னும் தனிமத்தைத் தமிழில் எழுதுவதைப் பற்றிக் கூறுகிறீர்கள். எசுப்பானியர் Estroncio என்கிறார்கள். நாம் எசுட்ரான்சியம் என்றோ திரான்சியம் என்றோ, எசுத்திரான்சியம் என்றோ கூறினால் என்ன தவறு? இத்தாலியன் Stronzio என்கிறான் (Strontium என்று சொல்லவில்லை) ஆகவே தனிமங்களின் பெயரை அவரவர்கள் தங்கள் மொழியில் பொருத்தமான முறையில் வழங்குவர்.

// ஜப்பான்காரனும், ஜெர்மானியனும், சைனாக்காரனும் தமிழை எப்படி எழுதினால் நமக்கென்ன ? //

அதே போலத்தானே! தமிழல்லா பிறமொழிச்சொற்களை தமிழில் நாம் எப்படி எழுதினால்தான் என்ன? நம்மொழிக்கு ஏற்றார்போலத்தானே எழுத வேண்டும்.

//உங்களுக்குப் பிடிக்கா விட்டால் என்ன ? உலகத் தமிழருக்குப் பிடிக்கிறதே ! அது போதும் எனக்கு.//

எனக்கு பிடிக்கவில்லை என்று கூறவில்லையே. நான் மனம் உவந்து பாராட்டுகிறேன். வடமொழி இல்லாமல், கிரந்தம் இல்லாமல் எழுத முடியாது என்பதை ஏற்கவில்லை. வடமொழி கலந்தோ, கிரந்தம் கலந்தோ எழுதுங்கள். நானும் அப்படித்தான் செய்கிறேன். ஆனால் இயலாது முடியாது என்று இல்லை.

அன்புடன்
செல்வா

26 06 2017
குமரேசன்

எனக்கும் அந்த திணிப்பு நெஞ்சு வலிக்கிறது.இன்றும் ஊடகங்ளிலும் எழுத்துகள் கலப்படம் ,நாளேடுகளும் சொல்லும் எங்களை கேளி செய்கிறார்கள்.சில தமிழ் சொற்கள்.விஞ்ஞானி “அறிவியலாலர்” ஆசீர்வாதம் “வாழ்த்து” இதயம்”நெஞ்சு” நன்றி.தமிழன்பன் குமரேசன்.

26 10 2017
சீனுவாசன். ச

சரியான அர்த்தம் இன்னும் ஒரு கேள்வி திருக்குறளில் மொத்தம் எத்துனை ஆயுத எழுத்துக்கள்

பின்னூட்டமொன்றை இடுக